பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் நடைபெற்று வந்த 17-ஆவது கோடைகால பாராலிம்பிக் போட்டியில் 29 பதக்கங்களை வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “பாராலிம்பிக் 2024 போட்டிகள் வரலாற்று சிறப்புமிக்கதாகும்.
நமது பாராலிம்பிக் விளையாட்டு வீரர்கள் 29 பதக்கங்களை நமது நாட்டிற்குக் கொண்டு வந்துள்ளதில் இந்தியா பெரு மகிழ்ச்சியடைகிறது. இந்தப் போட்டிகள் அறிமுகமானதிலிருந்து இந்தியாவின் சிறந்த பங்களிப்பு இது.
நமது விளையாட்டு வீரர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பும், அடங்காத மன உறுதியுமே இந்த வெற்றிக்குக் காரணம். அவர்களின் விளையாட்டு சாதனைகள் நமக்கு நினைவுகூரும்படியான பல தருணங்களை அளித்து, பல புதிய விளையாட்டு வீரர்களையும் ஊக்குவித்துள்ளன” என்று அவர் பதிவிட்டு தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நேற்று மாலை (செப். 9) நிறைவடைந்தது. இந்த நிகழ்வில் 64,000 பார்வையாளர்களும் 8,500 விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர்.
11 நாள்கள் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்கள் 7 தங்கம், 9 வெள்ளி மற்றும் 13 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தமாக 29 பதக்கங்களை வென்றுள்ளனர்.
பாராலிம்பிக் போட்டிகளில் கடந்த 1972 ஆம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த முரளிகாந்த பெட்கர் என்ற விளையாட்டு வீரர் நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். அதுவே இந்தப் போட்டிகளில் இந்தியாவிற்கான முதல் பதக்கம்.
இந்த ஆண்டு பாராலிம்பிக் போட்டிகளுக்கு முன்பு இந்தியா மொத்தமாக 31 பதக்கங்களை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.