விநாயகர் பூஜை சர்ச்சை: பாஜக பகிர்ந்த இஃப்தார் விருந்து புகைப்படம்! இப்போது ஏன்?
2009ஆம் ஆண்டு நடந்த இஃப்தார் விருந்து புகைப்படம் பாஜக தற்போது பகிர்ந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இல்லத்தில் நடைபெற்ற கணபதி பூஜையில் பங்கேற்றது பேசுபொருளாகியிருக்கும் நிலையில், மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அளித்த இஃப்தார் விருந்து புகைப்படத்தை பாஜக பகிர்ந்துள்ளது.
அதாவது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இல்லத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றிருப்பதற்கு, மூத்த வழக்குரைஞர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.
இதற்கு விளக்கம் அளித்திருக்கும் பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேஸ்சாத் பூனாவாலா, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
அதாவது, 2009ஆம் ஆண்டு பிரதமராக இருந்த மன்மோகன் சிங், அளித்த இஃப்தார் விருந்துக்கு, அப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கேஜி பாலகிருஷ்ணன் அழைக்கப்பட்டிருந்தார். இஃப்தார் விருந்தில் பிரதமரும் பாலகிருஷ்ணனும் பேசும்போது எடுத்தப் படத்தை பாஜக தற்போது பகிர்ந்துள்ளது.
மேலும் அவர் அதில், 2009 - பிரதமர் மன்மோகன் சிங் அளித்த இஃப்தார் விருந்தில் அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் பங்கேற்றார். - நீதித்துறை பாதுகாக்கப்பட்டது!
பிரதமர் நரேந்திர மோடி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டில் நடைபெற்ற கணபதி பூஜையில் பங்கேற்றார் - நீதித்துறையில் சமரசம் ஏற்பட்டது என்று பதிவிட்டுள்ளார்.