'பெண் மருத்துவர்கள் ஏன் இரவில் பணிபுரியக் கூடாது?' - உச்ச நீதிமன்றம் கேள்வி!
பெண் மருத்துவர்கள் இரவில் பணி செய்யக்கூடாது என கூற முடியாது, பாதுகாப்பு வழங்குவது உங்கள் கடமை என்று மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
பெண் மருத்துவர்கள் இரவில் பணி செய்யக்கூடாது என கூற முடியாது, பாதுகாப்பு வழங்குவது உங்கள் கடமை என்று மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மருத்துவர்கள் ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அவர்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. கொல்லப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இதனிடையே, பாதுகாப்பு கருதி பெண் மருத்துவர்கள் இரவுப் பணியைத் தவிர்க்குமாறு மேற்கு வங்க அரசு கூறியிருந்தது.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு,
பெண்கள் இரவில் பணியாற்ற முடியாது என்று எப்படி நீங்கள் சொல்லலாம். பெண்கள் சலுகைகளை எதிர்நோக்கவில்லை, அவர்கள் சம வாய்ப்புகளையே கோருகின்றனர். அனைத்து சூழல்களிலும் பணிபுரியவே விரும்புகின்றனர்.
இரவுப் பணியில் உள்ள பெண் மருத்துவர்களுக்கு நீங்கள் கண்டிப்பாக பாதுகாப்பு வழங்க வேண்டும். அதுதான் உங்கள் கடமை. அதைவிடுத்து அவர்கள் இரவுப் பணிக்கு வரக்கூடாது என்று நீங்கள் சொல்ல முடியாது.
பெண் மருத்துவர்கள் இரவுப் பணியை தவிர்க்குமாறு கூறிய மேற்கு வங்க அரசின் உத்தரவு உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும்' என்று உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.