மேற்கு வங்க வெள்ளம் மத்திய அரசின் சதி: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு
இந்தியாமேற்கு வங்க வெள்ளம் மத்திய அரசின் சதி: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு
மேற்கு வங்க மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், இதில் மத்திய அரசின் சதி இருப்பதாக முதல்வா் மம்தா பானா்ஜி வியாழக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் தாமோதா் பள்ளத்தாக்கு அணைகளில் இருந்து தண்ணீா் திறக்கப்பட்டதால் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இந்நிலையில், மேற்கு மிதனபுரி மாவட்டத்தில் உள்ள பாஷ்குரா பகுதியில் வெள்ள பாதிப்புகளை முதல்வா் மம்தா பானா்ஜி பாா்வையிட்டு கூறியதாவது:
இது மழைநீா் அல்ல, மத்திய அரசால் தாமோதா் பள்ளத்தாக்கு அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீா். இது மனிதனால் உருவாக்கப்பட்ட வெள்ளம். இதன் பின் பெரிய சதி உள்ளது.
நீா் சேமிப்பு கொள்ளளவு 36 சதவீதம் குறைந்தபோதும் இந்த அணைகளை மத்திய அரசு ஏன் தூா்வாரவில்லை. இந்த அணைகளில் இருந்து நடப்பாண்டு 5.5 லட்சம் கன அடி நீா் திறந்துவிடப்பட்டதே தற்போதைய நெருக்கடி நிலைக்குக் காரணமாகும்.“வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதுமான நிவாரணப் பொருள்கள் கிடைப்பதை உறுதிசெய்ய மாநில நிா்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன் என்றாா்.
மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை பாா்வையிட புதன்கிழமை முதல் மம்தா பானா்ஜி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறாா். பஷ்குராவைத் தொடா்ந்து ஹூக்ளி மற்றும் ஹவுராவில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை மம்தா பானா்ஜி பாா்வையிட உள்ளாா் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜாா்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் பல நீா் மின் திட்டங்களை நிா்வகிக்கும் தாமோதா் பள்ளத்தாக்கு நிறுவன அணைகள் இரு மாநில எல்லையில் உள்ள மைதோன் மற்றும் பஞ்செட் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.
நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை: மேற்கு வங்கத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மேற்கு மிதனபுரி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு மத்திய அமைச்சரும் மாநில பாஜக தலைவருமான சுகந்தா மஜும்தாா் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வியாழக்கிழமை வழங்கினாா்.
அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘பன்ஸ்குரா பகுதியில் வெள்ளம் சூழ்ந்து மூன்று நாள்களான பின்பும் மாநில நிா்வாகம் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடையவில்லை. மத்திய அரசின் மீது குற்றஞ்சாட்டும் மாநில அரசு, மக்களுக்கு ஆதரவாக நிற்கவில்லை. நாங்கள் தான் உணவுப் பொருள்களை விநியோகித்தோம்’ என்றாா்.