உண்மை காக்கப்பட்டது: உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அதானி கருத்து!
ஹிண்டன்பர்க் அறிக்கை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு மூலம் உண்மை நிலைநாட்டப்பட்டுள்ளதாக கெளதம் அதானி தெரிவித்துள்ளார்.
ஹிண்டன்பர்க் அறிக்கை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு மூலம் உண்மை நிலைநாட்டப்பட்டுள்ளதாக கெளதம் அதானி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அதானி, மதிப்புக்குரிய உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பு உண்மை நிலைநாட்டப்பட்டதைக் காட்டுகிறது. சத்யமேவ ஜெயதே. எங்களுக்கு உறுதுணையாக நின்றவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவின் வளர்ச்சிப் பாதைக்கு எங்களின் பங்களிப்பு தொடரும். ஜெய்ஹிந்த் எனப் பதிவிட்டுள்ளார்.
அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் முறைகேடு வழக்கை பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே (செபி) விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் இன்று (ஜன. 3) தீர்ப்பு வழங்கியுள்ளது.
செபியின் அதிகார வரம்பில் ஓரளவுக்கு மேல் உச்சநீதிமன்றத்தால் தலையிட முடியாது. வழக்கின் விசாரணையை செபியிடம் இருந்து சிறப்பு புலனாய்வு விசாரணைக் குழுவுக்கு மாற்ற எந்த அடிப்படையும் இல்லை.
மொத்தமுள்ள 22 புகார்களில் 20 குற்றச்சாட்டுகளை செபியே விசாரித்து முடித்துள்ள நிலையில், மீதமுள்ள 2 குற்றச்சாட்டுகளை அடுத்த 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.