பவன் கல்யாண் மகன் மார்க் சங்கர் எப்படியிருக்கிறார்?
ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் மகன் மார்க் சங்கர் உடல்நிலை குறித்த தகவல்.
சிங்கப்பூரில், பள்ளி இயங்கி வந்த கட்டடத்தில் நேரிட்ட தீ விபத்தில் 10 வயது சிறுமி பலியான நிலையில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மகன் மார்க் சங்கர் உள்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மூன்று தளங்களைக் கொண்ட ஆற்றங்கரையோர சாலைக் கட்டடத்தில் இயங்கி வந்த பள்ளியில் நேற்று காலை நேரிட்ட தீ விபத்தில் பவன் கல்யாண் மகன் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சிங்கப்பூர் விரைந்தார்.
இந்த விபத்தில் 23 வயது முதல் 55 வயதுவரையிலான ஆறு பெரியவர்களும் 16 குழந்தைகளும் தீவிபத்தில் காயமடைந்துளள்னர். இதில் பவன் கல்யாணின் ஏழு வயது இளைய மகனும் அடங்குவார். தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒரு சிறுமி பலியானார்.
இந்த நிலையில், பவன் கல்யான் மகன் மார்க் சங்கர் கை மற்றும் கால்களில் தீக்காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் தீ விபத்தில் சிக்கி புகையை சுவாசித்திருப்பதால் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்பதற்காக அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மார்க் சங்கருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, அவரது நுரையீரலில் எந்தவிதமான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் அவருக்கு அளிக்கப்பட்ட மயக்க மருந்தினால் பின்விளைவுகள் என்ன நேரிடுமோ என்று பவன் கல்யாணம் கவலைப்படுவதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
பவன் கல்யாண் மகன் எப்படியிருக்கிறார் என்று அவரது ஆதரவாளர்கள் பலரும் கட்சித் தலைமையிடம் கேட்டு வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.