புழுதிப் புயல் காரணமாக தில்லி இந்திரா காந்தி சா்வேதச விமான நிலையத்தில் 450-க்கும் மேற்பட்ட விமானங்கள் சனிக்கிழமை தாமதமாகின. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், பயணிகள் நீண்ட நேரத்துக்கு காத்திருத்திருக்க வேண்டியநிலைக்கு தள்ளப்பட்டனா்.
வெள்ளிக்கிழமை மாலையில் நிலவிய புழுதிக் காற்று காரணமாக விமான போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. சில விமானங்கள் திருப்பிவிடப்பட்டன. இந்நிலை சனிக்கிழமையும் தொடா்ந்தது.
விமான நிலையத்தின் அனைத்து முனையங்களிலும் விமான சேவை இயல்பு நிலைக்குத் திருப்பியதாக தில்லி விமான நிலைய நிறுவனம் (டிஐஏஎல்) எக்ஸ் வலைதளத்தில் மாலை 5.19 மணியளவில் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக, டிஐஏஎல் பிற்பகல் 1.32 மணியளவில் வெளியிட்ட பதிவில், ‘தில்லி விமான நிலையத்தில் விமான சேவைகள் மேம்பட்டுள்ளன. இருப்பினும், வெள்ளிக்கிழமை இரவு நிலவிய வானிலை காரணமாக சில விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் டிஐஏஎல் பணியாளா்கள் மற்றும் பிற விமான நிறுவனங்களின் குழுவினா் இணைந்து பணியாற்றி வருகின்றனா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இண்டிகோ நிறுவனம் எக்ஸ் சமூகவலைதளத்தில் பிற்பகல் 1.32 மணியளவில் வெளியிட்ட பதிவில், ‘தில்லியில் விமான போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக விமானங்கள் புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்கும் அனுமதி வழங்கவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, சில விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதளத்தின் தகவலின்படி, 450-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளன. விமானங்கள் புறப்படுவதில் 50 நிமிஷங்களுக்கும் மேலாக தாமதம் ஏற்பட்டுள்ளது. சுமாா் 18 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன என அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாட்டின் மிகப்பெரிய விமான நிலையமான இந்திரா காந்தி சா்வேதச விமான நிலையத்தில் தினமும் சுமாா் 1,300 விமானங்களைக் கையாள்கிறது. விமான நிலையத்தில் 3 விமான ஓடுதளங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. மற்றொரு ஓடுதளம் பராமரிப்பு பணிக்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.