முகப்பு
இந்தியா

அமலாக்கத் துறை ஒழிக்கப்பட வேண்டும்: அகிலேஷ் யாதவ்

மத்திய அரசின் கருவியாகச் செயல்படும் அமலாக்கத் துறை ஒழிக்கப்பட வேண்டும் என்றார் அகிலேஷ்.

Updated On : 16 ஏப்ரல் 2025, 8:03 pm IST
அகிலேஷ் யாதவ் - PTI
பகிர்:

மத்திய அரசின் கருவியாகச் செயல்படும் அமலாக்கத் துறை ஒழிக்கப்பட வேண்டும் என உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜவாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் ஆணைக்கிணங்க எதிர்க்கட்சி தலைவர்களை பழிவாங்கும் கருவியாக அமலாக்கத் துறை செயல்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

நேஷனல் ஹெரால்ட் வழக்கின் பண முறைகேடு குற்றச்சாட்டுகளின் கீழ், காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, அவரின் மகனும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

Advertisement

Advertisement

காங்கிரஸ் பிரமுகா் சாம் பித்ரோடா, முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் ஊடக ஆலோசகா் சுமன் துபே உள்ளிட்டோரின் பெயா்களும் குற்றப்பத்திரிகையில் சோ்க்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் இது குறித்து காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஸ்ரீகாந்த் ஜெனா உடன் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அமலாக்கத் துறை குறித்து அகிலேஷ் யாதவ் கூறியதாவது,

''காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் அமலாக்கத் துறை உருவாக்கப்பட்டபோது, இதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்காலத்தில் தங்களுக்கு எதிராகவும் இந்தத் துறை பயன்படுத்தப்படலாம் என சமாஜவாதி கட்சியும் எதிர்ப்பு தெரிவித்தது.

பாஜகவுக்கு எதிராக குரல் எழுப்புவோர் பின்னர், அமலாக்கத் துறை, வருமான வரித் துறை கொண்டு பழிவாங்கப்படுகின்றனர்.

என்னுடைய புரிதலின்படி, அமலாக்கத் துறை ஒழிக்கப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சியும் இதனை வலியுறுத்த வேண்டும் என அவர்களிடம் கோரவுள்ளேன். இதுபோன்ற சார்பு நிலை விசாரணை அமைப்புகள் இருந்தால், உண்மை மீது ஒருபோதும் நம்பிக்கை ஏற்படாது'' எனக் குறிப்பிட்டார்.

மேலும், தனது கட்சியை ஒடிஸா மாநிலத்திலும் விரிவாக்கம் செய்யவுள்ளது குறித்துப் பேசிய அவர், ''ஒடிஸாவில் சமாஜவாதி கட்சிக்கான நிர்வாக அமைப்பை விரிவாக்கம் செய்ய வேண்டும். அதற்கு அம்மாநிலத்தில் மக்களிடையே சென்றடையும் வகையில் கட்சித்தொண்டர்கள் களத்தில் இறங்கிப் பணியாற்ற வேண்டும்'' எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிக்க | வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர்களே இருக்க வேண்டும்: உத்தரவை நிறுத்திவைத்த உச்ச நீதிமன்றம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.