முகப்பு
இந்தியா

சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது உச்சநீதிமன்றம்: ஜகதீப் தன்கர் காட்டம்

மசோதா தொடர்பான வழக்கில் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் எதிர்ப்பு.

Updated On : 17 ஏப்ரல் 2025, 4:31 pm IST
குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்
பகிர்:

மசோதா தொடர்பான வழக்கில் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு அவா் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்ததை எதிர்த்தும் தமிழகத்தின் மூன்று பல்கலைக்கழகங்களில் துணை வேந்தா்களின் நியமன விவகாரத்தில் ஆளுநரின் தலையீடு அதிகரிப்பதாகவும் கூறி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த ஏப். 8 அன்று அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியது.

அதன்படி, தமிழக பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டத்துக்கு எதிரானது என்றும் அந்த மசோதாக்கள் ஆளுநர் ஒப்புதல் அளித்ததாகவே கருதப்படும் என்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. மேலும் மசோதாவுக்கு ஒரு மாதத்திற்குள் ஒப்புதல் வழங்க வேண்டும் என்பது உள்பட ஆளுநருக்கு பல உத்தரவுகளை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

மேலும், மாநில ஆளுநா்கள் முதலாவது முறையாக அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களுக்குள் குடியரசுத் தலைவா் முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தொடர்பாக தில்லியில் குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் மாநிலங்களவை பயிற்சியாளர்கள் மத்தியில் பேசிய அவர்,

"ஆளுநர்கள் அனுப்பும் மசோதா தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் சமீபத்தில் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாம் எங்கே செல்கிறோம்? இந்த நாட்டில் என்ன நடக்கிறது? யாரேனும் மறுஆய்வு தாக்கல் செய்கிறார்களா, இல்லையா என்பது பிரச்னை அல்ல. நாங்கள் ஒருபோதும் ஜனநாயகத்திற்காக பேரம் பேசவில்லை. குடியரசுத்தலைவர் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிவெடுக்க வேண்டும், இல்லையென்றால் அது சட்டமாகிறது.

குடியரசுத்தலைவரை நீதிமன்றம் இவ்வாறு வழிநடத்தும் முறையை அனுமதிக்க முடியாது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நாட்டின் மிக உயர்ந்த பதவியின் அரசியலமைப்பு அதிகாரத்தைக் குறைக்கிறது.

அரசமைப்பின் 145(3) பிரிவை விளக்குவதுதான் நீதிமன்றத்தின் ஒரே உரிமை. அதற்கும் அமர்வில் 5 நீதிபதிகள் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இருக்க வேண்டும்.

உச்சநீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் பிரிவு 142-ஐ ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணையைப் போல உச்சநீதிமன்றம் மாற்றியுள்ளது. உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம்போல செயல்படுகிறது. சட்டம் இயற்றுவது போன்ற நாடாளுமன்றத்தின் பணிகளை நீதிமன்றம் செய்கிறது" என்று பேசியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக ஜகதீப் தன்கர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.