புனித பீட்டா் சதுக்கத்தில் நடந்த போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சனிக்கிழமை பங்கேற்றார்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “வாடிகன் நகரத்தில் உள்ள புனித பீட்டா் சதுக்கத்தில் நடைபெற்ற போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார்” என்று ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.
266-ஆவது போப் ஆண்டவரான போப் பிரான்சிஸ் (88), வயது முதிா்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை காலமானாா். போப் பிரான்சிஸுக்கான இறுதிச் சடங்கு புனித பீட்டா் சதுக்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து வாடிகனில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்பட உலகத் தலைவர்கள் பலர் பங்கேற்றனர். முன்னதாக இந்தியா சார்பில் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தில்லியில் இருந்து வாடிகனுக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றனர்.
அவருடன் நாடாளுமன்றம் மற்றும் சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மத்திய இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் உள்ளிட்டோரும் சென்றனர். தொடர்ந்து புனித பீட்டா் சதுக்கத்தில் போப் பிரான்சிஸுக்கு முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
இதனிடையே, போப் பிரான்சிஸின் மறைவையொட்டி, இந்தியாவில் மூன்று நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.