சுதந்திர தின உரைக்கான யோசனைகளைப் பகிருங்கள்! - பிரதமர் மோடி அழைப்பு
சுதந்திர தின உரைக்கான யோசனைகளைப் பகிருமாறு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
சுதந்திர தின விழா வருவதையொட்டி, பிரதமரின் உரையில் இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்த யோசனைகளைப் பகிருமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி 79-வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்படவிருக்கிறது. சுதந்திர தினத்தன்று தில்லி செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றி உரையாற்றுவார்.
அந்தவகையில் இந்தாண்டுக்கான உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து மக்கள் தங்கள் கருத்துகளைப் பகிர பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"இந்த ஆண்டு சுதந்திர தின விழா நெருங்குவதையொட்டி நான் இந்திய மக்களிடமிருந்து யோசனைகளைக் கேட்க ஆவலுடன் இருக்கிறேன்.
இந்த ஆண்டு சுதந்திர தின உரையில் என்னென்ன கருப்பொருள்கள் அல்லது விஷயங்கள் இடம்பெற வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?
உங்களுடைய எண்ணங்களை நமோ செயலி, MyGov தளங்களில் பகிருங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.