உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்துள்ளார். அங்கு சுமார் ரூ.2,183.45 கோடி மதிப்பிலான 52 மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.
விவசாயிகளை ஆதரிப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பிரதமர் கிசான் சம்மான் நிதியின் 20வது தவணையை வெளியிட்டார். நாடு முழுவதும் 9.70 கோடி தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.20,500 கோடி வரவு வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்குச் சக்கர நாற்காலிகள், முன்றுசக்கர வண்டிகள் போன்ற உதவி சாதனங்களை அவர் வழங்கினார்.
வாரணாசியின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் எனது மரியாதைக்குரிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் கூறினார். அவர் தனது உரையைத் தொடங்கும்போது அங்குக் கூடியிருந்தவர்கள் பலத்த ஆரவாரத்தை எழுப்பி பிரதமரை வரவேற்றனர்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர்களான கேசவ் பிரசாத் மௌரியா, பிரஜேஷ் பதக் ஆகியோருடன் பல அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், பாஜகவின் மாநில பிரிவுத் தலைவர் பூபேந்திர சிங் சௌத்ரி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பாஜகவின் காசி பிராந்தியப் பிரிவின் தலைவர் திலீப் படேலின் கூற்றுப்படி,
இது பிரதமர் மோடியின் நாடாளுமன்றத் தொகுதிக்கு 51வது வருகையாகும். ரக்ஷாபந்தனுக்கு முன்னதாகவும், புனிதமான ஆடி மாதத்திலும் அவரது வருகை பூர்வாஞ்சல் பிராந்தியத்திற்குக் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஊக்கத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
52 நலத்திட்டங்களில் சாலை கட்டுமானம் மற்றும் விரிவாக்கம், மருத்துவமனை மேம்பாடு, கல்வி நிறுவனங்களின் மேம்பாடு, சிறந்த குடிநீர் மற்றும் சுகாதாரம், விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாடு, ஹோமியோபதி கல்லூரி நிறுவுதல், மத சுற்றுலாவிற்கான நடைபாதை கட்டுதல், மின்சாரம், வாகன நிறுத்துமிட வசதிகளை விரிவுபடுத்துதல், குளம் புதுப்பித்தல் மற்றும் நூலகங்கள், விலங்கு மருத்துவமனைகள், நாய் பராமரிப்பு மையங்களை அமைத்தல் ஆகியவை உள்ளடக்கியதாகும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.