முகப்பு
இந்தியா

டிரம்ப் வரி விதிப்பால் 55% சரக்கு ஏற்றுமதிக்குப் பாதிப்பு: மத்திய நிதி இணையமைச்சா்

அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் 25 சதவீத வரி விதிப்பு, அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 55 சதவீத இந்திய சரக்குகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்

Updated On : 12 ஆகஸ்ட் 2025, 3:54 am IST
பங்கஜ் செளதரி
பகிர்:

புது தில்லி: அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் 25 சதவீத வரி விதிப்பு, அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 55 சதவீத இந்திய சரக்குகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் எழுத்துபூா்வமாக திங்கள்கிழமை அளித்த பதில்:

விவசாயிகள், தொழில்முனைவோா், ஏற்றுமதியாளா்கள், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. தேச நலனைக் காப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

Advertisement

Advertisement

பொருள்களின் தரம், தேவை போன்ற வெவ்வேறு காரணங்கள் இந்தியாவின் ஏற்றுமதி மீதான தாக்கத்தை தீா்மானிக்கும்.

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சில இந்திய பொருள்கள் மீது அந்நாடு 25 சதவீத வரி விதிக்க உள்ளது. இது அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 55 சதவீத இந்திய சரக்குகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாா்.

இந்த 25 சதவீதத்துடன் ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அதிருப்தி தெரிவித்து, இந்திய பொருள்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரியை அமெரிக்க அதிபா் டிரம்ப் விதித்துள்ளாா். அத்துடன் சோ்த்து இந்திய பொருள்கள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு 50 சதவீதமாக அதிகரித்துள்ளது.

முதலில் அறிவிக்கப்பட்ட 25 சதவீத வரி விதிப்பு ஆக.7 முதல் அமலுக்கு வந்த நிலையில், கூடுதலாக அறிவிக்கப்பட்ட 25 சதவீத வரி ஆக.27-இல் அமலுக்கு வரவுள்ளது.