நீதிபதி வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்படுவதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் வீட்டில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தின்போது எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது, மேலும் அவரது வீட்டில் இருந்து லட்சக்கணக்கில் பணம் கண்டெடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையில் உள் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு அந்த குழு விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தது. விசாரணையில் நீதிபதி வீட்டில் பணம் இருந்தது உறுதியானது. இதனிடையே நீதிபதி தில்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.
தன் மீதான குற்றச்சாட்டுக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்ந்த வழக்கையும் உச்சநீதிமன்றம் சில நாள்களுக்கு முன்பு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி 146 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட தீர்மானத்தை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார்.
நீதிபதி வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க, உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, கர்நாடக உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா ஆகிய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படுவதாக அறிவித்தார்.
இந்தக் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்வரை இந்த தீர்மான முன்மொழிவு நிறுத்தி வைக்கப்படுவதாகவும் கூறினார்.
குழுவின் அறிக்கையில் நீதிபதி மீதான குற்றச்சாட்டு உறுதியாகும்பட்சத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நீதிபதி பதவி நீக்க தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும். 3ல் 2 பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு நீதிபதி பதவியில் இருந்து நீக்கப்படுவார்.
இதையும் படிக்க | வாயில்லா ஜீவன்கள் அழிக்கப்பட வேண்டிய பிரச்னை அல்ல! ராகுல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.