ராகுல் காந்தியும் முகமது அலி ஜின்னாவும் ஒரே மாதிரியான சிந்தனை கொண்டவர்கள் என்று பாஜக விமர்சனம் சுமத்தியுள்ளது.
என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதை விமர்சித்து காங்கிரஸ் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இதற்கு பாஜக எதிர்வினை ஆற்றியுள்ளது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா இன்று(ஆக. 16) பேசியதாவது: "என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகங்களில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை குறித்த உண்மை இப்போது சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளதால் ‘ராகுல் - ஜின்னா’ கட்சி மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறது. ராகுலுக்கும் முகமது அலி ஜின்னாவுக்கும் ஒரே மாதிரியான சிந்தனை உள்ளது. மதத்தின் அடிப்படையில் இந்தியா பிரிக்கப்பட்டது.
ஜின்னாவின் விஷமத்தனமான சிந்தனையானது, ராகுல் காந்தியிடமும் காங்கிரஸ் கட்சியிடமும் இருப்பதை இப்போது பார்க்க முடிகிறது. இடஒதுக்கீடும் மதத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டுமென்று காங்கிரஸ் கட்சி சொல்கிறது. இதையேத்தான் ஜின்னாவும் தெரிவித்திருந்தார்.
ஷரியத் சட்டத்தையும் இந்தியாவில் அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சொல்கிறது. இந்தநிலையில், பிரிவினைப் பற்றிய உண்மையை வருங்கால தலைமுறைகள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும்” என்றார்.
முன்னதாக, தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் பங்கேற்காமல் நாட்டை இழிவுபடுத்தியதாக பாஜக சாடியது.
இன்னொருபுறம், ஆட்சியில் தொடா்வதற்காக, பாஜக எத்தகைய சீா்கேட்டிலும் ஈடுபடும் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கடுமையாக விமா்சித்தாா்.
இந்தநிலையில், பாகிஸ்தான் பிரிவினைக்கு முக்கிய காரணமாக கருதப்படும் முகமது அலி ஜின்னாவுடன் இந்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவரை ஒப்பிட்டு பாஜக பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.