காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி நாளை மறுநாள்(பிப். 21) சென்னை வரவுள்ளதாக உறுதி செய்யப்படாதத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் உள்ள சில மூத்த நிர்வாகிகள் ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
குறிப்பாக மாணிக்கம் தாகூர் எம்.பி., அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வுக் குழுவின் தலைவர் பிரவீண் சக்ரவர்த்தி ஆகியோர் நேரடியாகவே இது குறித்து திமுகவிடம் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
திமுக கூட்டணியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும், அதிக தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பி வலியுறுத்தினர்.
இதனிடையே, கூட்டணி ஆட்சி தமிழகத்துக்கு ஒத்துவராது என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
அண்மையில் சென்னை வருகைதந்த, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் கே.சி. வேணுகோபால், ”மக்களவைத் தேர்தலைப் போலவே, வருகிற பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடரும்.
இந்தக் கூட்டணியில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸ் நிலைப்பாடு அல்ல. திமுக-காங்கிரஸ் கூட்டணி குறித்து கட்சியினர் யாரும் பொதுவெளியில் பேசக் கூடாது” எனத் தெரிவித்தார்.
இதற்குப் பிறகு, ஆட்சியில் பங்கு குறித்து மாணிக்கம் தாகூர் எம்.பி. பொதுவெளியில் எதுவும் பேசாமல் இருக்கிறார்.
இந்தச் சூழலில், காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி நாளை மறுநாள்(பிப். 21) சென்னை வரவுள்ளதாக உறுதி செய்யப்படாதத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவாா்த்தை வரும் பிப்.22 முதல் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்திருந்த நிலையில், ராகுல் காந்தியின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.