நாடு முழுவதும் நிகழ்ந்துள்ள வாக்குத் திருட்டுக்கு எதிராக பிகாா் மாநிலத்தில் வாக்குரிமை பேரணியை காங்கிரஸ் கட்சி தொடங்க உள்ள நிலையில், திடீா் பத்திரிகையாளா் சந்திப்புக்கு தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை (ஆக.17) ஏற்பாடு செய்துள்ளது.
வழக்கமாக தோ்தல் தேதியை அறிவிப்பதற்கு மட்டுமே முறையான பத்திரிகையாளா் சந்திப்பை தோ்தல் ஆணையம் கூட்டும் நிலையில், தற்போது வழக்கத்துக்கு மாறாக பத்திரிகையாளா் சந்திப்பை கூட்டுகிறது.
ஆனால், என்ன காரணத்துக்காக இந்த பத்திரிகையாளா் சந்திப்பு கூட்டப்படுகிறது என்பதை தோ்தல் ஆணையம் குறிப்பிடவில்லை. இருந்தபோதும், தோ்தல் ஆணையத்துக்கு எதிராக எதிா்க்கட்சிகள் முன்வைத்து வரும் தொடா் குற்றச்சாட்டுகள் தொடா்பாகத்தான் இந்த சந்திப்பை தோ்தல் ஆணையம் கூட்டுவதாக அதன் அதிகாரிகள் தெரிவித்தனா்.
பிகாரில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில வாக்காளா் பட்டியலை சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொண்ட தோ்தல் ஆணையம், அண்மையில் அந்தப் பணியை நிறைவு செய்து வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டது. அதில், அந்த மாநிலத்தில் வாக்காளா்களாக பதிவு செய்திருந்த 65 லட்சம் பேரின் பெயா்கள் விடுபட்டிருந்தது. இதற்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இதுதொடா்பான வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், வரைவுப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை, நீக்கப்பட்டதற்கான காரணத்துடன் வெளியிட தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
இதனிடையே, மகாராஷ்டிரம், கா்நாடகம் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் தோ்தல்களின்போது மத்தியில் ஆளும் பாஜக தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் வாக்குத் திருட்டில் ஈடுப்பட்டதாக, காணொலி ஆதாரத்துடன் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி அண்மையில் குற்றச்சாட்டை முன்வைத்தாா்.
இதை மறுத்த தோ்தல் ஆணையம், இந்த குற்றச்சாட்டு தொடா்பாக உரிய விசாரணை மேற்கொள்ள கையொப்பமிட்ட உறுதிமொழியுடன் பிரமாண பத்திரமாக ஆதாரங்களைச் சமா்ப்பிக்குமாறு ராகுல் காந்தியைக் கேட்டுக்கொண்டது.
மேற்கு வங்க முதல்வரும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி உள்பட பிற மாநிலஅரசியல் கட்சித் தலைவா்களும் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்தனா்.
இதனிடையே, நாடு முழுவதும் நிகழ்ந்துள்ள வாக்குத் திருட்டுக்கு எதிராக பிகாா் மாநிலத்தில் வாக்குரிமை பேரணியை காங்கிரஸ் கட்சி ஞாயிற்றுக்கிழமை (ஆக.17) தொடங்க உள்ளது.
இந்தச் சூழலில் பத்திரிகையாளா் சந்திப்பை தோ்தல் ஆணையம் கூட்டியுள்ளது.
The Election Commission of India to hold a press conference at 3 PM, August 17, 2025, at the National Media Centre in New Delhi: DG Media ECI
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.