முகப்பு
இந்தியா

தவறுக்கு தண்டனை அளிப்பதாகக் கூறி தாய்க்கு பாலியல் வன்கொடுமை: மகன் கைது!

தில்லியில் 65 வயதுடைய தாயிடம் இருமுறை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 39 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Updated On : 17 ஆகஸ்ட், 2025 at 11:23 AM
மாதிரிப் படம்
பகிர்:

தில்லியில் பெற்ற தாயிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தாய் செய்த தவறுக்கு தண்டனை அளிப்பதாகக் கூறி அவரிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக மகன் தெரிவித்துள்ளார்.

மத்திய தில்லியில் 65 வயதுடைய தாயிடம் இருமுறை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 39 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளார். இளைய மகள் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர், மகனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

காவல் துறையினர் அளித்த தகவலின்படி, 25 வயது இளம்பெண் ஹவுஸ் காசி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், தாங்கள் ஆன்மிக பயணம் மேற்கொண்டு திரும்பியபோது, தாயிடம் தனது சகோதரர் தகாத முறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகாரின்படி, பாதிக்கப்பட்ட தாயார், ஓய்வு பெற்ற தனது கணவருடனும், 39வயது மகன் மற்றும் 25 வயது மகளுடன் வசித்து வருகிறார். இவருடைய மூத்த மகள் அருகிலேயே திருமணம் செய்துகொடுக்கப்பட்டுள்ளார்.

ஜூலை 17ஆம் தேதி தாயாரும் கணவரும் மகளுடன் செளதி அரேபியாவுக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளனர். ஆனால், மகன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உடனடியாக அவர்களை தில்லி திரும்புமாறு வற்புறுத்தியுள்ளார்.

தாயிக்கு வேறு ஒருவருடன் தகாத உறவு உள்ளதால், அவரை விவாகரத்து செய்ய வேண்டும் என தந்தையிடம் மகன் கூறியதாகவும் தெரிகிறது.

ஆக. 1ஆம் தேதி தில்லி திரும்பிய பிறகு குற்றம் சாட்டப்பட்ட மகன், தாயை அறையில் வைத்து பூட்டி அவரின் ஆடையை கழற்றுமாறு வற்புறுத்தியுள்ளார். தனது குழந்தைப் பருவத்தை அழித்துவிட்டதாகக் கூறி அவரைத் தாக்கியுள்ளார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து தாயார், அருகிலுள்ள தனது மூத்த மகள் வீட்டிற்குச் சென்று தங்கியுள்ளார். பின்னர் ஆக. 11 ஆம் தேதி இரவு 9 மணியளவில் அந்த வீட்டிற்குச் சென்ற மகன், தாயிடம் தனியாகப் பேச வேண்டும் என தனியறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், செய்த தவறுக்கு தண்டனை தருவதாகக் கூறி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஆக. 14ஆம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் இரண்டாவது முறை தாயிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கு மறுநாள், நடந்த சம்பவங்களை மகளிடம் தாய் கூறியுள்ளார். இதனை அடுத்து இளைய மகள் கொடுத்த புகாரின்பேரில் மகனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிக்க | பிகாரில் வாக்குரிமைப் பேரணி தொடக்கம்: மூவண்ணக் கொடியசைத்து ஆரவாரம்!

summary

Delhi man rapes mother twice after accusing her of having 'bad character

முழு கட்டுரையைப் படிக்க →