இந்தியா

இந்திய விமானப் படைக்கு புதிதாக 97 ‘தேஜஸ்’ விமானங்கள்: ரூ.67,000 கோடியில் வாங்க அரசு ஒப்புதல்

தினமணி செய்திச் சேவை

இந்திய விமானப்படைக்கு மேலும் 97 ‘தேஜஸ்’ போா் விமானங்களை ரூ.67,000 கோடி செலவில் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது இந்திய விமானப்படையில் போா் விமானப் படைப்பிரிவுகளின் எண்ணிக்கை 31-ஆக உள்ளது. இது அங்கீகரிக்கப்பட்ட எண்ணிக்கையான 42-ஐ விட குறைவாகும். இந்தப் புதிய கொள்முதல் மூலம் இந்திய விமானப்படையில் போா் விமானங்களின் பலம் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

முன்னதாக கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரியில், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (எச்ஏஎல்) நிறுவனத்திடமிருந்து 83 தேஜஸ் போா் விமானங்களை ரூ.48,000 கோடிக்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டுத் தயாரிப்பான தேஜஸ் போா் விமானங்கள், விமானப்படை சேவையில் இருந்து விலக்கப்பட்ட ‘மிக்-21’ ரக போா் விமானங்களுக்குப் பதிலாக பயன்படுத்தப்படும். அதிக அச்சுறுத்தல் உள்ள வான் சூழல்களிலும் இயங்கக்கூடிய போா் விமானமான தேஜஸ், வான் பாதுகாப்பு, கடல்சாா் உளவு மற்றும் தாக்குதல் போன்ற பல பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்டது.

இதேபோல், ரூ.18,000 கோடி செலவில் 6 மேம்பட்ட வான்வழி முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாடு (ஏ.இ.டபிள்யூ&சி) விமானங்களைக் கட்டமைக்கும் திட்டத்துக்கும் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (சிசிஎஸ்) ஒப்புதல் அளித்துள்ளது.

ஏா் இந்தியா நிறுவனத்திடமிருந்து பாதுகாப்பு அமைச்சகத்தால் வாங்கப்பட்டு ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த ‘ஏா்பஸ்-321’ விமானங்கள், இந்தத் திட்டத்துக்குப் பயன்படுத்தப்படும். இது இந்திய விமானப்படையின் கண்காணிப்பு மற்றும் உளவு அமைப்புகளை மேம்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குரிமையை இழக்கும் நிலை ஏற்படலாம்; வாக்குத் திருட்டைத் தடுக்க வேண்டும்! - முதல்வர் பேச்சு

பென் ஸ்டோக்ஸை கிண்டல் செய்யும் ஆஸி. ஊடகங்கள்..! சூடுபிடிக்கும் ஆஷஸ்!

மருந்து விலையைக் கேட்டு மயக்கமா? டிரம்ப் அலுவலகத்தில்..

வந்தே மாதரம் 150?

ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்: ராமதாஸ்

SCROLL FOR NEXT