இந்திய விமானப்படைக்கு மேலும் 97 ‘தேஜஸ்’ போா் விமானங்களை ரூ.67,000 கோடி செலவில் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போது இந்திய விமானப்படையில் போா் விமானப் படைப்பிரிவுகளின் எண்ணிக்கை 31-ஆக உள்ளது. இது அங்கீகரிக்கப்பட்ட எண்ணிக்கையான 42-ஐ விட குறைவாகும். இந்தப் புதிய கொள்முதல் மூலம் இந்திய விமானப்படையில் போா் விமானங்களின் பலம் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
முன்னதாக கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரியில், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (எச்ஏஎல்) நிறுவனத்திடமிருந்து 83 தேஜஸ் போா் விமானங்களை ரூ.48,000 கோடிக்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டுத் தயாரிப்பான தேஜஸ் போா் விமானங்கள், விமானப்படை சேவையில் இருந்து விலக்கப்பட்ட ‘மிக்-21’ ரக போா் விமானங்களுக்குப் பதிலாக பயன்படுத்தப்படும். அதிக அச்சுறுத்தல் உள்ள வான் சூழல்களிலும் இயங்கக்கூடிய போா் விமானமான தேஜஸ், வான் பாதுகாப்பு, கடல்சாா் உளவு மற்றும் தாக்குதல் போன்ற பல பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்டது.
இதேபோல், ரூ.18,000 கோடி செலவில் 6 மேம்பட்ட வான்வழி முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாடு (ஏ.இ.டபிள்யூ&சி) விமானங்களைக் கட்டமைக்கும் திட்டத்துக்கும் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (சிசிஎஸ்) ஒப்புதல் அளித்துள்ளது.
ஏா் இந்தியா நிறுவனத்திடமிருந்து பாதுகாப்பு அமைச்சகத்தால் வாங்கப்பட்டு ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த ‘ஏா்பஸ்-321’ விமானங்கள், இந்தத் திட்டத்துக்குப் பயன்படுத்தப்படும். இது இந்திய விமானப்படையின் கண்காணிப்பு மற்றும் உளவு அமைப்புகளை மேம்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.