மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 114 ரஃபேல் விமானங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாத இறுதியில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இந்தியாவுக்கு வருகை தரும்போது ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் ரஃபேல் போர் விமானங்களை தயாரித்து வருகின்றது. அந்நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட 36 ரஃபேல் விமானங்களை இந்திய விமானப் படை பயன்படுத்தி வருகின்றது.
இதனிடையே, கடந்தாண்டு ஏப்ரல் மாதம் இந்திய கடற்படையின் பயன்பாட்டுக்காக 26 ரஃபேல் விமானங்களை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிலையில், நாட்டின் மேற்கு மற்றும் வடக்கு எல்லைகளில் அதிகரித்து வரும் அச்சுறுத்தல் காரணமாக கூடுதல் போர் விமானங்களை வாங்குவதற்கான பணிகளை மத்திய பாதுகாப்புத் துறை தொடங்கியது.
இதுதொடர்பாக டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில், ரூ. 3.25 லட்சம் கோடியில் 114 ரஃபேல் விமானங்களை கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் 18 ரஃபேல் விமானங்கள் பறக்கும் நிலையில் வழங்கப்படும் என்றும், மீதமுள்ள 96 விமானங்கள் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டில் பொருத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதில், 88 ஒற்றை இருக்கை விமானங்களும், 26 இரட்டை இருக்கை விமானங்களும் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.