பஞ்சாப் வெள்ளம்: மீட்புப் பணியில் முதல்வரின் ஹெலிகாப்டர்!
பஞ்சாபில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க முதல்வரின் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படுவது குறித்து...
பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு, அம்மாநில முதல்வர் பகவந்த் மானின் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் வட மாநிலங்களில், பருவமழையின் தாக்கத்தால் கனமழை பெய்து வருவதால், பல்வேறு முக்கிய நகரங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு வருகின்றது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் பெய்த கனமழையால் குர்தாஸ்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டு ஏராளமான வீடுகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, பஞ்சாபில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட குர்தாஸ்பூர் மாவட்டத்தை, அம்மாநில முதல்வர் பகவந்த் மான் இன்று (ஆக.27) நேரில் பார்வையிட்டார்.
அப்போது, பேசிய அவர் இனி வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு காரில் செல்லவுள்ளதாகவும், தனக்கு அரசு வழங்கிய ஹெலிகாப்டரை வெள்ளத்தில் பாதித்த மக்களை மீட்கவும், அவர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கவும் பயன்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
“மக்கள் இந்த ஹெலிகாப்டரை எங்களுக்கு வழங்கினர். தற்போது, இந்த நெருக்கடியான நேரத்தில் நாங்கள் இந்த ஹெலிகாப்டரை மக்களுக்காக பயன்படுத்துகிறோம்” எனக் கூறியுள்ளார்.
பஞ்சாபில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து மக்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படை, ராணுவப் படை ஆகிய படைகள் ஈடுபட்டு வருகின்றன.
இதையும் படிக்க: நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!