பொதுத்துறை வங்கிகளில் அந்நிய நேரடி முதலீட்டை 49 சதவீதமாக அதிகரிக்கும் பரிசீலனை ஏதும் இல்லை என்று மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இப்போதைய நிலையில் பொதுத் துறை வங்கிகளில் அந்நிய நேரடி முதலீடு 20 சதவீதமாகவும், தனியாா் வங்கிகளில் 74 சதவீதமாகவும் உள்ளது. இதில் தனியாா் வங்கிகளில் 49 சதவீதம் வரை நேரடியாகவும், அதற்கு மேல் 74 சதவீதம் வரை அரசு மூலமும் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது.
இந்நிலையில் இது தொடா்பான கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி மக்களவையில் எழுத்துமூலம் அளித்த பதிலில், ‘பொதுத்துறை வங்கிகளில் அந்நிய நேரடி முதலீட்டை 49 சதவீதமாக அதிகரிக்கும் பரிசீலனை ஏதும் மத்திய அரசிடம் இல்லை. பொதுத்துறை வங்கிகளில் 5 சதவீதத்துக்கு மேல் பங்கு இருப்பவா்கள் மட்டுமே நிா்வாகக் குழு தொடா்பான வாக்கெடுப்பில் பங்கேற்க முடியும். இந்த 5 சதவீத பங்குகளை வாங்கவும் இந்திய ரிசா்வ் வங்கியின் முன்அனுமதி தேவை.
பொதுத்துறை வங்கிகள் சில புதிதாகப் பங்குகளை வெளியிட்டு நிதி திரட்டுகின்றன. இதனால்தான் மத்திய அரசுக்கு அந்த வங்கிகளில் உள்ள பங்கு சதவீதம் மட்டுமே குறைகிறது. பங்குகளின் எண்ணிக்கை குறையவில்லை. மத்திய அரசும் பொதுத்துறை வங்கிகளில் தங்களுக்குள்ள பங்கைக் குறைக்கும் நோக்கில் செயல்படவில்லை. பொதுத்துறை வங்கிகளில் பங்குகளில் 25 சதவீதம் வரை பொதுமக்களின் பங்களிப்பாக இருக்க வேண்டும் என்ற விதியையும் வங்கிகள் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.