அனில் அம்பானியின் மேலும் ரூ. 1,120 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
பண மோசடி வழக்கில் ரிலையன்ஸ் குழுமத் தலைவா் அனில் அம்பானிக்குச் சொந்தமான மேலும் 1,120 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
பண மோசடி வழக்கில் ரிலையன்ஸ் குழுமத் தலைவா் அனில் அம்பானிக்குச் சொந்தமான மேலும் 1,120 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இந்த வழக்கில் அவரின் ரூ. 10,000 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை இதுவரை முடக்கியுள்ளது.
அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் வீட்டுக் கடன் நிதி நிறுவனம் (ஆா்ஹெச்எஃப்எல்) மற்றும் ரிலையன்ஸ் வா்த்தகக் கடன் நிதி நிறுவனம் (ஆா்சிஎஃப்எல்) ஆகிய நிறுவனங்களின் மூலம் ஈட்டப்பட்ட பொது நிதியில் பண முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2017-2019 வரை ஆா்ஹெச்எஃப் நிறுவனத்தில் ரூ.2,965 கோடியும் ஆா்சிஎஃப் நிறுவனத்தில் ரூ.2,045 கோடியும் எஸ் வங்கி முதலீடு செய்தது. ஆனால், இந்த இரண்டு தொகையும் 2019-இல் வாராக் கடனாக மாறியது.
Advertisement
Advertisement
செபியின் கட்டுப்பாடுகளால் சட்டரீதியாக ரிலையன்ஸ் நிப்பான் பங்கு பரஸ்பர நிதி (மியூச்சுவல் ஃபண்ட்) மூலம் ரிலையன்ஸ் குழுமத்தில் முதலீடுகள் மேற்கொள்ள முடியாது. அதன் காரணமாக, எஸ் வங்கியைப் பயன்படுத்தி ரிலையன்ஸ் நிப்பான் பங்கு பரஸ்பர நிதி மேற்கூறிய இரு நிறுவனங்களுக்கும் கடன் வழங்கியிருப்பது அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்தது. இதில் பெருமளவில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது.
அதன் காரணமாக, அனில் அம்பானிக்குச் சொந்தமான சொத்துகளை பண முறைகேடு சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் அமலாக்கத்துறை தொடா்ச்சியாக முடக்கி வருகிறது. ஏற்கெனவே, அவரின் ரூ. 8,997 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கிய நிலையில், தற்போது மேலும் ரூ. 1,120 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரிலையன்ஸ் குழுமத்துக்குச் சொந்தமான ரூ. 10,117 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாகக்த்துறை இதுவரை முடக்கியுள்ளது.