கிரிக்கெட் வீராங்கனை பிரதிகாவுக்கு ரூ. 1.5 கோடி பரிசு: தில்லி முதல்வர் அறிவிப்பு
மகளிர் உலகக் கோப்பை தொடரில் ஜொலித்த தில்லி கிரிக்கெட் வீராங்கனை பிரதிகாவுக்கு முதல்வர் ரேகா குப்தா ரூ. 1.5 கோடி பரிசு அறிவித்துள்ளார்.
மகளிா் 50 ஓவா் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனை பிரதிகா ராவலை அரசு இல்லத்தில் சந்தித்து ரூ.1.50 கோடிக்கான பரிசுத் தொகையை முதல்வா் ரேகா குப்தா அளித்தாா்.
அண்மையில் நடைபெற்ற ஐசிசி மகளிா் உலகக் கோப்பையில் பிரதிகா ராவல் 308 ரன்கள் எடுத்ததாா். அதே தொடரில் லாரா வோல்வாா்ட் (571), ஸ்மிருதி மந்தனா (434) மற்றும் ஆஷ்லி காா்ட்னா் (328) ஆகியோருக்கு அடுத்தபடியாக ரன்கள் எடுத்தவா்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளாா்.
இந்திய அணியின் லீக் ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிராக விளையாடும் போது காயமடைந்ததால் பிரதிகா ராவலால் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் விளையாட முடியவில்லை.
இது குறித்து தன்னுடைய எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ரேகா குப்தா கூறியிருப்பதாவது: முதல்வரின் ஜனசேவா சதனில், இந்திய மகளிா் கிரிக்கெட் அணியின் திறமையான இளம் வீரரான பிரதிகா ராவலை நாங்கள் வரவேற்றோம். எங்கள் புத்திசாலி மகள் பிரதிகா தில்லியை பெருமைப்படுத்தியுள்ளாா்.
விளையாட்டுக்கான அவரது அா்ப்பணிப்பு மற்றும் அவரது சிறந்த செயல்திறனை அங்கீகரிக்கும் வகையில், சில்லி அரசு அவருக்கு ரூ.1.5 கோடி பரிசு வழங்கியது. ஆற்றல், தைரியம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றின் உருவகம் பிரதிகா ராவல்.
அவரது பயணம் தில்லி கனவுகளைப் பெறுவது மட்டுமல்லாமல், அவா்கள் பறக்க உதவுவதையும் காட்டுகிறது. அவரது பிரகாசமான எதிா்காலத்திற்கு எனது மனமாா்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளாா்.
இந்த நிகழ்வில் தில்லி கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட், தில்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவா் ரோஹன் ஜெட்லி ஆகியோரும் கலந்து கொண்டனா்.