தேசிய கீதம் போன்று... தேசிய பாடலுக்கு இடம் கொடுக்கவில்லை: ராஜ்நாத் சிங்
மக்களவையில் வந்தே மாதரம் பாடல் குறித்து காங்கிரஸை விமர்சித்து ராஜ்நாத் சிங் உரையாற்றியது பற்றி..
தேசிய கீதத்திற்கு அளிக்கப்பட்டதைப் போன்று தேசிய பாடலுக்கு இடம் கொடுக்கப்படவில்லை என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (டிச., 8) தெரிவித்தார்.
வந்தே மாதரம் பாடல் 150 ஆண்டுகள் நிறைவு செய்திருப்பதை கொண்டாடும் வகையில் மக்களவையில் இன்று வந்தே மாதரம் குறித்த விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்து உரையாற்றினார்.
நரேந்திர மோடியின் உரையைத் தொடர்ந்து வந்தே மாதரம் பாடலுக்கு முன்னுரிமை அளிக்கப்படாததைக் குறிப்பிட்டு மக்களவையில் ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.
அவையில் ராஜ்நாத் சிங் பேசியதாவது,
''வந்தே மாதரம் பாடலுக்கு கொடுக்கப்பட வேண்டிய நீதி இன்னும் கிடைக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். தேசிய கீதத்திற்கும் தேசிய பாடலுக்கும் சம இடம் கொடுக்கப்பட வேண்டும்.
இதில், ஒன்று தேசிய உணர்வுக்குட்பட்ட ஒன்றாக மாறியது. மற்றொன்று புறக்கணிக்கப்பட்டதாகிவிட்டது. இது ஒரு கூடுதல் பாடலாகவே பார்க்கப்பட்டது.
1937 ஆம் ஆண்டு வந்தே மாதரம் இயற்றப்பட்ட இதே மண்ணில் அப்பாடலை காங்கிரஸ் துண்டு துண்டாக்க முடிவு செய்தது. இது அப்பாடலுக்கு இழைக்கப்பட்ட அநீதி மட்டுமல்ல, சுதந்திர இந்தியாவின் மக்களையும் அவமதிப்பதைப்போன்றது'' எனப் பேசினார்.
மேலும் பேசிய அவர், ''தேசிய உணர்வில் தவிர்க்க முடியாத பாடல் வந்தே மாதரம். இதனைக் குறுகிய எல்லைக்குள் முடக்க நினைப்பது ஏமாற்று வேலை.
வந்தே மாதரம் பாடலின் பெருமையை மீட்டெடுப்பதே தற்போதைய காலம் மற்றும் ஒழுக்கத்தின் தேவையாக உள்ளது. வந்தே மாதரம் பாடல் தன்னளவில் முழுமையானது. ஆனால், அதனை முழுமையற்றதாக்க முயற்சிகள் நடத்தப்பட்டன.
வந்தே மாதரம் பாடல் உணர்வில் கலந்தது. உலகின் எந்தவொரு சக்தியாலும் இதனைக் குறைக்க முடியாது. வந்தே மாதரம் பாடலுக்கு இழைக்கப்பட்ட அநீதி தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல, மாறாக மற்றவர்களை திருப்திப்படுத்தும் காங்கிரஸ் அரசியலின் தொடக்கமாக இது மாறியுள்ளது'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | ஜின்னாவை புகழ்ந்தவர் எல்.கே. அத்வானி! நேருவை விமர்சித்த மோடிக்கு காங்கிரஸ் பதிலடி!