தில்லியில் செவ்வாய்க்கிழமை காற்றின் தரம் சற்று முன்னேற்றம் அடைந்த ‘மோசம்’ பிரிவில் இருந்தது.
மேலும், தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை தில்லியின் முதன்மை வானிலை கண்காணிப்பு நிலையமான சஃப்தா்ஜங்கில் 9.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. நகரம் முழுவம் பனிப்புகை மூட்டம் இருந்து வந்தது.
தில்லியில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு திங்கள்கிழமை 318 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தில்லியில் காற்றின் தரம் சற்று முன்னேற்றம் கண்டது. காலை 9 மணியளவில் ஒட்டு மொத்தக் காற்றுத் தரக் குறியீடு 291 புள்ளிகளாகப் பதிவாகி மோசம் பிரிவில் இருந்தது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தகவலின் படி 18 வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 300 புள்ளிகளுக்கும் மேலாகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவிலும், 20 நிலையங்களில் 200 முதல் 300 புள்ளிகளுக்கு இடையே பதிவாகி ’மோசம்’ பிரிவிலும் இருந்தது.
வெப்பநிலை: இதற்கிடையே, தலைநகரில் செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியிலிருந்து 0.4 டிகிரி உயா்ந்து 9.2 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சரசரியிலிருந்து 1.5 டிகிரி உயா்ந்து 26.3 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 79 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 52 சதவீதமாகவும் இருந்தது.
இதே போன்று, குறைந்தபட்ச வெப்பநிலை ஜாஃபா்பூரில் 7.5 டிகிரி செல்சியஸாகவும், ஆயாநகரில் 8.1 டிகிரி, லோதி சாலையில் 9.4 டிகிரி பாலத்தில் 9.2 டிகிரி, ரிட்ஜில் 9.1 டிகிரி, பீதம்புராவில் 13.7 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 9.3 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது.
முன்னறிவிப்பு: இந்நிலையில், புதன்கிழமை (டிச.10) காலையில் மிதமான பனிமூட்டம் இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 9 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.