விமானிகள் பணி நேரம் மற்றும் ஓய்வுக் காலம் குறித்த புதிய விதிமுறைகளால், இண்டிகோ விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் அதிருப்தி அடைந்த பயணிகளால், இண்டிகோ ஊழியர்கள் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவங்களும் நடந்துள்ளன.
விமான நிலையங்களில் இண்டிகோ மையத்தின் முன்கள பணியாளர்கள் பெரும்பாலும், பயணிகளால் தகாத வார்த்தைகளால் வசைபாடுவதை ஏற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
பெரும்பாலான ஊழியர்கள் இளைஞர்களாக இருக்கும் நிலையில், இதுபோன்ற ஒரு மோசமான சூழலைக் கையாள அவர்களுக்கும் போதுமான பயிற்சிகள் இல்லாத நிலையில், அதிருப்தியில் கூச்சலிடும் பயணிகளை எவ்வாறு சமாளிப்பது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.
விமான சேவை நிறுவனத்தில் பணியாற்றுவதைத் தவிர அவர்களது தவறுகள் எதுவும் இல்லாதபோதும், பயணிகளின் நேரடியான கோபத்துக்கு ஆளாகும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.
சிலர், கடுமையான வார்த்தைகளால் திட்டுவதும், சில பயணிகள், ஊழியர்கள் அமர்ந்திருக்கும் அறைக்குள் நுழைந்து, அவர்களை தாக்க முற்படுவதும் வெளியாகி வருகிறது.
பாதுகாப்புப் படை வீரர்கள், அவர்களை சாமளித்த போதும், கடுமையான மன நெருக்கடி மற்றும் பதற்றத்துடனே அவர்கள் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பணியாற்றி வருகிறார்கள். நிலைமை சரியாகும் என்ற நம்பிக்கை இருந்த போதும், உடைமைகளை இழந்து, விமான பயணம் தள்ளிப்போனதால் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்காமல் மன விரக்தி அடைந்த பயணிகளின் கோபத்தை ஒவ்வொரு நாளும் எதிர்கொண்டு வந்த இண்டிகோ வரவேற்பறை பணியாளர்களின் நிலை கவலைக்குரியதாகவே உள்ளதாக விமான நிலையங்களில் நடந்த சம்பவங்களைப் பார்த்தவர்கள் தங்கள் கருத்துகளாகப் பதிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.