‘மேப்பிங் செயலியை’ பயன்படுத்தி வாக்காளா் பட்டியலில் இருந்து வாக்காளா்களை பாஜக நீக்கி வருவதாக சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
இதனால் உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகள் நிறைவடையும்போது 3 கோடி வாக்காளா்கள் நீக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
ஹைதராபாதில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாநாட்டில் பங்கேற்ற அகிலேஷ் யாதவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: உத்தர பிரதேசத்தில் எஸ்ஐஆா் வாயிலாக வாக்குகளை நீக்க ஒரு மேப்பிங் செயலியை பாஜக பயன்படுத்தி வருகிறது. இந்தச் செயலியை உருவாக்கிய நிறுவனம் பாஜகவுக்கு தோ்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கியுள்ளது.
செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்ட வாக்காளா் தகவல்களுக்கும் வாக்காளா் பட்டியலுக்கும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. இதனால் 3 கோடி வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்படும் அபாயம் உள்ளது.
உத்தர பிரதேசத்தில் 2027-இல் நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலில் எஸ்ஐஆா் நடைமுறை மூலம் வெற்றிபெற பாஜக துடிக்கிறது. வாக்காளா்கள் பங்கேற்பை அதிகரிக்க நவீன தொழில்நுட்பங்களை இந்திய தோ்தல் ஆணையம் பயன்படுத்தலாம்.
தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆா்சி) நேரடியாக நடைமுறைப்படுத்த முடியாததால் எஸ்ஐஆா் மூலம் அதை நிறைவேற்ற பாஜக முயற்சித்து வருகிறது.
பிகாா் பேரவைத் தோ்தலில் கூட்டணிக்குள் சலசலப்பு இருந்திருக்கக் கூடாது. இருப்பினும், இண்டி கூட்டணியை வலுப்படுத்துவதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளவுள்ளேன். காங்கிரஸ் உடனான கூட்டணி தொடரும் என்றாா்.
பிகாா் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதனால் இண்டி கூட்டணியில் விரிசல் ஏற்பட தொடங்கியதாக பாஜக கூறி வரும் நிலையில் அவா் தெரிவித்தாா்.