தில்லியில் வரி செலுத்துவது ஒரு மோசடி! மாசு, குப்பை! - ஐந்தாண்டுகளுக்குப் பின் தில்லி திரும்பிய நபர் ஆதங்கம்!
வாழத் தகுதியற்ற இடமா தலைநகர்? - ஐந்தாண்டுகளுக்குப் பின் தில்லிக்குத் திரும்பிய நபர் ஆதங்கம்!
தேசியத் தலைநகர் புது தில்லியின் இப்போதைய சூழலை கடுமையாக விமர்சித்து வெளிநாட்டிலிருந்து தில்லிக்குத் திரும்பிய நபர் ஒருவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தலைநகா் தில்லியில் அடா்த்தியான மூடுபனி நிலவியதோடு காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் நிலைபெற்றுள்ளது. இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்த அந்த நபர், அண்மையில் தாயகம் திரும்பினார். ஆனால், மீண்டும் தில்லியில் கால்பதித்த அவர் நேரில் பார்த்த காட்சிகளும் இப்போதைய சூழலும் அவருக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியிருப்பதை அவரது சமூக ஊடகப் பதிவின் மூலம் அறிய முடிகிறது.
அந்தப் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது :
Advertisement
Advertisement
“நான் தில்லியில் பிறந்து வளர்ந்தவன். இந்தநிலையில், அமெரிக்காவிலிருந்து 5 ஆண்டுகளுக்குப் பின் தில்லி திரும்பிய நான் அதிர்ச்சிக்குள்ளானேன். திரும்பும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டத்தைக் காண முடிகிறது.
தெற்கு தில்லியில் நான் சென்றபோது, முக்கிய சாலைகள் ஒவ்வொன்றிலும் போக்குவரத்து நெரிசல். அதனைத் தவிர்ப்பதற்காக சிறிய சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளின் பொறுப்பற்ற தன்மையால், குறுகலான அந்தச் சாலைகள் முடங்கிப் போயுள்ளன. எவரும் போக்குவரத்து சிக்னலைப் பின்பற்றிச் செல்வதில்லை, எதிர் திசையில் செல்வது இப்படி தங்கள் வசதிக்கேற்ப செயல்படுகிறார்கள்.
எங்கு பார்த்தாலும் கார்கள்மயம்! எப்படி இந்த நகரில் 30 ஆண்டுகள் வாழ்ந்தேன் என்ற ஆச்சரியமே எனக்குள் எழுந்தது.
சரி, மெட்ரோ ரயிலில் செல்லலாம் என்று கிளம்பினேன். அங்கும் மக்கள் வெள்ளத்தால் ரயில்கள் நிரம்பிவழிந்ததைப் பார்த்தேன். ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகள் உள்ளே இருக்கும் பயணிகளை வெளியே இறங்கவிடாமல் முண்டியடித்துக்கொண்டு ஏற முற்பட்டனர். அதற்குக் காரணம் மக்கள் கூட்டமே!
அடுத்ததாக, மாநகரில் மிக மிக மோசமாக குப்பை படிந்துள்ளது.
மேற்கு மற்றும் வடக்கு தில்லியில் உறவினர்களைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அந்தப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் குப்பைகளும் அவற்றை நாய்கள் இழுத்துப்போட்டு மேய்வதையும் பார்க்க முடிந்தது. சில இடங்களில் சாலைகளில் பசுக்கள் சுற்றித்திரிந்தன. அவற்றைக் கட்டுப்படுத்த எவருமேயில்லை.
நாட்டின் தலைநகரின் புறநகர்ப் பகுதிகளில் இப்படியிருந்தாலும் பரவாயில்லை, ஆனால் தலைநகரின் முக்கிய பகுதிகளில் இந்த அவலம்!
ஒருவேளை எனக்குத்தான் அப்படி தோன்றுகிறதா? அல்லது மக்கள்தொகை பன்மடங்கு அதிகரித்ததன் விளைவா?
உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாக தில்லி மாறியிருப்பதை அதன்பின் தெரிந்துகொண்டேன். அதற்கு முன்பு வரை, மும்பைதான் அந்தப் பட்டியலில் முதலிடம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.
தில்லியில் வீசும் காற்றில் மாசுபாடு மிக அதிகமாகவே உள்ளது.
இப்படி மக்கள்தொகை மளமளவென பெருக என்ன காரணம்? மக்கள் எப்படி இங்கு வாழ்கிறார்கள்? இங்கு வரி செலுத்துவது ஒரு மோசடி என்றே எண்ணத் தோன்றுகிறது.
நகரில், வாழ்வாதார செலவும் மிக அதிகம் என்றே தோன்றுகிறது. இப்படிப்பட்ட சூழலில் வாழ இவ்வளவு அதிக பணம் செலுத்தி செலவழிக்க வேண்டுமா என்ற எண்ணம் ஊடுருவுகிறது.
கார்கள், மின்னணு சாதனங்கள், துணிகள், அடிப்படை பொருள்களான பால், காய்கறிகள், பழங்கள் என அனைத்தும் நாம் கொடுக்கும் விலைக்கு ஏற்ப தரமாக இல்லை.
இதனிடையே, இணையத்தில் விவாதங்கள் பல அரங்கேறுவதைப் பார்க்க முடிகிறது. எதைப் பற்றியென்றால்..? இந்தியா மிக வேகமாக வளரும் பொருளாதார நாடு என்பதைப் பற்றிய விவாதங்களே அவை... மேற்கத்திய நாடுகளைவிட வேகமாக வள்ர்கிறது என்கிறார்கள்.
ஆனால், என்னை நம்புங்கள் ஒன்றைச் சொல்கிறேன் - இந்தியா நடைமுறையில் இன்னும் வெகுதூரம் பின்தங்கியே இருக்கிறது.
செய்ய வேண்டிய பணிகளோ இங்கு ஏராளம். நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை ஒருபுறம் விட்டுவிட்டு, மக்களிடம் அடிப்படை சமூகப் பொறுப்பைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியே ஆக வேண்டும்.
தில்லியில் மக்கள்தொகையைக் குறைக்க அரசு சில நடவடிக்கைகளை கட்டாயம் எடுத்தே ஆக வேண்டும். வெளியூர்களிலிருந்து தில்லிக்கு இடம்பெயரும் விகிதத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.
அத்துடன், மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் புதிதாக சாலைகளையும் அமைக்க வேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
Delhi Returnee man, after five years, expressed shock at the city
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.