டிசம்பர் மாதத்தில் இண்டிகோ விமான ரத்து மற்றும் தாமதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ. 10,000 மதிப்புள்ள பயணக் கூப்பன் வழங்கப்படும் என்று இண்டிகோ நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த பயணக் கூப்பன் எப்போது வழங்கப்படும் என்று கேள்வி எழுந்திருந்த நிலையில் வருகிற டிச. 26 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று இண்டிகோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
விமானிகளுக்கு அதிக ஓய்வு கொடுக்கும் புதிய விதிகள் கொண்டுவரப்பட்டதன் காரணமாக, விமானிகள் பற்றாக்குறையால் தொடர்ந்து இண்டிகோ விமான சேவை டிசம்பர் மாத தொடக்கத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது இண்டிகோ விமான சேவை ஓரளவுக்கு சீராகியுள்ளது. இதனிடையே டிச. 3, 4, 5 தேதிகளில் விமான சேவையின் கடுமையான பாதிப்பால் மக்கள் பலரும் அவதிக்குள்ளாகினர்.
இதையடுத்து அந்த தேதிகளில் பயணித்த அதிகம் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ. 10,000 மதிப்பிலான பயணக் கூப்பன் வழங்கப்படும் என்று இண்டிகோ அறிவித்தது. இந்த ரூ. 10,000 மதிப்புள்ள பயணக் கூப்பனை அடுத்த 12 மாதங்கள் வரை பயன்படுத்தலாம் என்று கூறியிருந்தது.
இந்த கூப்பன் இன்னும் வழங்கப்படாத நிலையில் வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளது.
இண்டிகோவின் இணையதளம் மூலம் நேரடியாக முன்பதிவு செய்த பயணிகளின் தரவுகள் ஏற்கனவே விமான நிறுவனத்திடம் இருப்பதால் அவர்களுக்கு ஒரு வாரத்திற்குள் பணம் வழங்கத் தொடங்க நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இழப்பீட்டுத் தொகை வெற்றிகரமாக விநியோகிக்கப்படுவதைக் கண்காணிக்கும் பணி சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த பயணக் கூப்பன் அல்லாது ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளுக்கு பணம் திருப்பி கொடுப்பதுடன் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ. 5,000 முதல் ரூ. 10,000 வரை இழப்பீடு தொகையும் வழங்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.