'பெண்களுக்குதான் அந்த வலி தெரியும்' ரூ. 8,000 கூப்பன் பற்றி கனிமொழி விளக்கம்!
திமுக தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு கூப்பன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது பற்றி...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக, கடந்த சனிக்கிழமை வேட்பாளர் பட்டியலை அறிவித்த நிலையில் நேற்று(மார்ச் 29, ஞாயிறு) தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தது.
இதில் முக்கியமாக, திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 8,000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும். இந்த தொகைக்கு வாஷிங் மெஷின், டிவி, ஃபிரிட்ஜ், மைக்ரோவேவ் ஓவன், மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பொருள்களை வாங்கலாம் அல்லது மாற்றிக்கொள்ளலாம் என்று கூறப்பட்டது.
இதுபற்றி விளக்கமளித்த திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும் தேர்தல் அறிக்கை குழுவின் தலைவருமான கனிமொழி,
"இல்லத்தரசி கூப்பன் என்கிற ரூ. 8,000 மதிப்புள்ள கூப்பன் பெண்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவது போலவே, வருமான வரி செலுத்தாத தகுதியான பெண்களுக்கு இது வழங்கப்படும்.
கருணாநிதி முதல்வராக இருந்தபோது பெண்களுக்கு கேஸ் அடுப்பு கொடுக்கப்படும் என்றார். 'ஒரு பர்னர் உள்ள அடுப்பு கொடுக்கலாமே, அதுவே போதும், செலவு குறையும்' என்று மற்றவர்கள் சொன்னார்கள். ஆனால் கலைஞர் இரண்டு பர்னர் உள்ள அடுப்பு தரச் சொன்னார்கள். பெண்கள் தங்கள் சமையல் வேலையை சீக்கிரம் முடித்துவிட்டு அவர்களுக்கு பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்தவோ வேலைக்குச் செல்லவோ பயன்படும் என்று கூறினார்கள்.
அதுபோல இப்போது பெண்களுக்கு எந்த பொருள் தேவையோ இந்த கூப்பன் மூலமாக வாங்கிக்கொள்ளலாம். ஒரு வாஷிங்மெஷின் வாங்கினால் கையால் துணியை துவைக்கத் தேவையில்லை. அந்த நேரம் அவர்களுக்கு மிச்சப்படுகிறது. அந்த நேரத்தில் வேறு வேலை செய்ய முடியும்.
நாங்கள் எல்லாருக்கும் ஒரு ஃபிரிட்ஜ் கொடுக்கலாம். ஆனால் சில பெண்கள் வீட்டில் ஃபிரிட்ஜ் வைத்திருக்கலாம். அவர்களுக்கு வேறு பொருள் தேவைப்படலாம். அதனால்தான் இந்த கூப்பன் முறை. பெண்களின் வேலைச் சுமையை குறைக்கும்பொருட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு மட்டுமே அந்த வலி தெரியும்" என்று பேசினார்.
மேலும் பேசிய அவர், "2021 தேர்தலில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுகவின் தேர்தல் அறிக்கையை படிக்கக்கூட தனக்கு நேரம் இல்லை. அவர்களின் தேர்தல் அறிக்கையை காப்பி அடிக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை" என்றார்.