மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை மாற்றியது மாநிலங்களின் உள்கட்டமைப்பு மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தில்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலுகத்தில் இன்று(டிச. 27) காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட செயற்குழு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்திற்குப் பிறகு காங்கிரஸ் தலைவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினர்.
அப்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில்,
"மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை மாற்றியது, இந்தியாவிலுள்ள மாநிலங்கள் மீதான தாக்குதல். மத்திய பாஜக அரசு, மாநிலங்களுக்குச் சொந்தமான பணத்தையும் மாநிலங்களுக்குரிய முடிவெடுக்கும் அதிகாரத்தையும் பறிக்கிறது. மாநிலங்களின் உள்கட்டமைப்பு மீதான தாக்குதல். ஏனெனில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் (MNREGA) உள்கட்டமைப்பை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டது. இது நாட்டின் ஊரகப் பகுதிகளின் பாதுகாப்பாக இருந்தது. ஊரகப் பகுதிகளின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்தது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) என்பது வெறும் ஒரு திட்டம் மட்டுமல்ல; அது உரிமைகள் அடிப்படையிலான ஒரு கருத்தாக்கமாகும். இதன் மூலமாக கோடிக்கணக்கான மக்கள் குறைந்தபட்ச ஊதியத்தைப் பெற்றனர். இது பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களுக்கு அரசியல் மற்றும் பொருளாதாரப் பங்கேற்பிற்கான ஒரு நேரடி கருவியாக இருந்தது.
இது வெறும் வேலைவாய்ப்புத் திட்டம் மட்டுமல்ல. ஒரு கருத்தியல் கட்டமைப்பு, ஒரு மேம்பாட்டுக் கட்டமைப்பு. இது உலகம் முழுவதும் பாராட்டப்பட்டுள்ள ஒரு திட்டம். கார்கே குறிப்பிட்டதுபோல, அவர் 16 நாடுகளுக்குச் சென்றுள்ளார். அந்த ஒவ்வொரு நாடுமே எங்கள் அரசு முற்றிலும் புதிய, உரிமை அடிப்படையிலான ஒரு கருத்தை முன்வைத்ததை பாராட்டியுள்ளது.
ஆனால் பிரதமர், அமைச்சரவையைக் கலந்தாலோசிக்காமல் இதைப்பற்றி முழுமையாக ஆய்வு செய்யாமல் தன்னிச்சையாக செயல்பட்டு இந்த திட்டத்தை மாற்றியுள்ளார். மாநிலங்களும் இதனால் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மாநிலங்கள் மீதும் நாட்டின் ஏழை மக்கள் மீதும் தொடுக்கப்பட்ட ஒரு பேரழிவுத் தாக்குதல். பணமதிப்பிழப்பு நடவடிக்கைபோல, இதுவும் பிரதமரால் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. பழங்குடியினர், தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஏழைகள் மற்றும் சிறுபான்மையினருக்கும் பெரும் துன்பத்தை ஏற்படுத்தப் போகிறது. அதேநேரத்தில் இது அதானிக்கு முழுமையாகப் பயனளிக்கப் போகிறது. ஏழை மக்களிடமிருந்து பணத்தைப் பறித்து அதானி போன்றவர்களிடம் ஒப்படைப்பதுதான் இதன் நோக்கம்" என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.