FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உன்னாவ் வழக்கு: குழந்தைகள் உயிருக்கு ஆபத்து! சாட்சிகளுக்கு பாதுகாப்பு கோரும் பாதிக்கப்பட்ட பெண்!

உன்னாவ் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண், சாட்சியங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரியது குறித்து...

Updated On : 28 டிசம்பர் 2025, 6:13 pm IST
தில்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக போராட்டத்தில் பங்கெடுத்த பாதிக்கப்பட்ட பெண் - படம் - பிடிஐ
பகிர்:

குடும்ப உறுப்பினர்களுக்கும் சாட்சியங்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உன்னாவ் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் கேட்டுக்கொண்டுள்ளார்.

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியான முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரின் ஆயுள் தண்டனையை தில்லி உயா்நீதிமன்றம் நிறுத்திவைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய முற்போக்கு மகளிர் சங்கத்தினர் இன்று (டிச., 28) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைநகரான தில்லியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பல்வேறு தரப்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்கக்கோரி முழக்கங்களை எழுப்பினர்.

Advertisement

Advertisement

போராட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணும் கலந்துகொண்டு தனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்ததாகவும், ஆனால் தற்போது தனது குடும்பத்திற்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது, ''உச்சநீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியையும் சிபிஐ அதிகாரிகளையும் குல்தீப் சிங் செங்கர் விலைக்கு வாங்கிவிட்டார்.

எனது கணவரின் வேலை பறிக்கப்பட்டுவிட்டது. எனது குழந்தைகளும் சாட்சியங்களும் உயிருக்கு அச்சுறுத்தலான சூழலில் உள்ளனர். சிபிஐ அதிகாரிகளிடம் தான் பெயர் குறிப்பிட்ட நபர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். முதல்வர் யோகி ஆதித்யநாத்தை வேண்டி கேட்டுக்கொள்கிறேன். நீதி வேண்டி நிற்கும் எனது போராட்டத்தைத் தொடர எனக்கு பாதுகாப்பு கொடுங்கள்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2017-ஆம் ஆண்டு, உத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் ஒருவரை (அப்போது அவருக்கு 17 வயது) செங்கா் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்தாா்.

இந்த வழக்கில், செங்கருக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த 2019-இல் ஆயுள் தண்டனை விதித்தது. இதற்கு எதிரான செங்கரின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தில்லி உயா் நீதிமன்றம், மனு மீது இறுதி முடிவு எடுக்கப்படும் வரை அவரின் ஆயுள் தண்டனையை நிறுத்திவைப்பதாக கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. அத்துடன் அவருக்கு ஜாமீன் அளித்தும் உத்தரவிட்டது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டாலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை காவலில் மரணமடைந்த வழக்கில் செங்கருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்படாததால், அவா் சிறையிலிருந்து விடுவிக்கப்படவில்லை.

எனினும் பாலியல் வன்கொடுமை வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்துள்ள தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு, பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, குல்தீப் சிங் செங்கரின் ஆயுள் தண்டனையை தில்லி உயா்நீதிமன்றம் நிறுத்திவைத்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

summary

All India Progressive Women Association holds protest in support of Unnao rape case victim

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments