டாடாநகர் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து விஜயவாடா மண்டல ரயில்வே மேலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேசம் மாநிலம், யலமஞ்சிலி அருகே டாடாநகர்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் நள்ளிரவு 12:45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பி1 மற்றும் எம்2 ஆகிய இரண்டு குளிர்சாதனப் பெட்டி முழுவதும் எரிந்து சேதமடைந்தது. விஜயவாடாவைச் சேர்ந்த பயணி சந்திரசேகர் சுந்தரம் என்பவர் பலியானார்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த ரயில்வே மீட்புக் குழுவினர் பயணிகள் அனைவரையும் பத்திரமாக மீட்டு, தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
சம்பவ இடத்தை ஆய்வு செய்த விஜயவாடா மண்டல ரயில்வே மேலாளர் மோஹித் சோனகியா தெரிவித்ததாவது:
“யலமஞ்சிலி ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை டாடா - எர்ணாகுளம் விரைவு ரயிலின் பி1 பெட்டியில் முதலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பின்னர், எம்2 பெட்டிக்கும் தீ பரவியது.
விபத்தை சுதாரித்த பயணச்சீட்டு பரிசோதகர் மற்றும் ரயில் பணியாளர்கள் அனைத்து பயணிகளையும் ரயிலில் இருந்து இறங்குமாறு எச்சரித்தனர். யலமஞ்சிலியில் இருந்து தீயணைப்புப் படை வரவழைக்கப்பட்டு, தீ அணைக்கப்பட்டுள்ளது.
விரிவான விசாரணைக்காக விசாகப்பட்டினத்தில் இருந்து தடயவியல் குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள்.
தீ விபத்து ஏற்பட்ட பெட்டிகளுக்கு பதிலாக மாற்றுப் பெட்டிகள் இணைக்கப்பட்டு, அனைத்து பயணிகளுடன் ரயில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.