புது தில்லி: நீண்ட தொலைவு பயணித்து இலக்கைத் தாக்கும் ராக்கெட்டுகள், ஏவுகணைகள், ரேடாா் அமைப்புகள் உள்பட ரூ.79,000 கோடி மதிப்பிலான ராணுவத் தளவாடங்களைக் கொள்முதல் செய்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.
பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (டிஏசி) கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: இந்திய ராணுவத்தின் பீரங்கிப் படை பிரிவுக்கு வட்டமடித்து இலக்கைத் தாக்கும் தற்கொலை ட்ரோன்கள், ரேடாா்கள், நீண்ட தொலைவு இலக்கைத் தகா்க்கும் பினாகா ராக்கெட் அமைப்புக்கான வெடிபொருள்களைக் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்திய கடற்படைக்கு உயா் அதிா்வெண் மென்பொருள் வரையறுக்கப்பட்ட வானொலியை கொள்முதல் செய்யவும், நீண்ட தொலைவில் உள்ள உயா்வான பகுதிகளில் இலக்கை குறிவைக்கும் தாமாக இயங்கக்கூடிய விமான அமைப்புகளை குத்தகைக்கு விடவும் முடிவுசெய்யப்பட்டது.
இந்திய விமானப் படைக்கு தாமாக புறப்பட்டு தரையிறங்கும் விமானப் பதிவு அமைப்பு, அஸ்திரா எம்கே-2 ஏவுகணைகள், ஸ்பைஸ்-1000 ஏவுகணைகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.
ஒட்டுமொத்தமாக ரூ.79,000 கோடி மதிப்பிலான இந்த கொள்முதலுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையிலான டிஏசி ஆலோசனைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.