முகப்பு
இந்தியா

கண்ணியத்துடன் இறக்கும் உரிமையைப் பெறப்போகும் ஓய்வுபெற்ற ஆசிரியை!

கண்ணியத்துடன் இறக்கும் உரிமையைப் பெறப்போகும் முதல் ஆளாகிறார் ஓய்வுபெற்ற ஆசிரியை.

Updated On : 11 பிப்ரவரி 2025, 6:09 pm IST
கோப்புப்படம்
பகிர்:

தேவநாகரி: கர்நாடக மாநிலத்தில் பல்வேறு சட்டப்போராட்டங்களுக்குப் பின், ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை காரிபசம்மா (85) கண்ணியத்துடன் இறக்கும் உரிமையைப் பெறும் முதல் ஆளாக மாறப்போகிறார்.

கண்ணியத்துடன் இறக்கும் உரிமையை வழங்கி கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனவரி 30ஆம் தேதி இது தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது கர்நாடக அரசு.

கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, தேவையான நடைமுறைகளை முடித்து, தனது விருப்பப்படி காரிபசம்மா இறப்பதற்காகக் காத்திருக்கிறார்.

Advertisement

Advertisement

மரணிப்பதற்காகக் காத்திருக்கிறார் என்றால், அவர் கடந்து வந்த பாதை அவ்வளவு துயரமானது. முதுகெலும்பில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக படுத்த படுக்கையாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் சிகிச்சையில் உள்ளார். இந்த துயர நிலையில்தான், அவருக்கு அண்மையில் புற்றுநோய் உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமடைந்து வரும் நிலையில், கடந்த 24 ஆண்டுகளாக அவர் கண்ணியத்துடன் இறக்கும் உரிமை கோரி சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். இது தொடர்பாக அவர் முதல்வர், பிரதமர் அலுவலகம், உச்ச நீதிமன்றத்துக்குக் கூட பல கடிதங்களை எழுதியிருக்கிறார்.

இந்த நிலையில்தான், கண்ணியத்துடன் மரணிக்கும் உரிமை வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதனை செயல்படுத்தும் முதல் மாநிலமாக கர்நாடகம் மாறியிருக்கிறது.

இது குறித்து கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கூறுகையில், இந்த உரிமை, உயிர் காக்கும் கருவிகளுடன் சிகிச்சை பெற்று வருவோருக்கும், உயிரைக் காக்க தொடர்ந்து சிகிச்சை பெறுபவர்களுக்கும் மட்டுமே பொருந்தும் என்று விளக்கம் அளித்துள்ளார்.

ஏராளமானோர் இந்த விண்ணப்பத்துடன் காத்திருப்பதாகவும், ஆனால், அதில் முதல் ஆளாக நானே இருக்க வேண்டும் என்று காரிபசம்மா விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சட்டப்போராட்டம் மற்றும் சிகிச்சைக்காக அவர் தனது ஒட்டுமொத்த சொத்தையும் இழந்திருக்கிறார். ஆனால், இதன் மூலம், தன்னைப்போல உயிருக்குப் போராடும் நோயாளிகள் கண்ணியத்துடன் மரணிக்க தனது போராட்டம் உதவும் என்பதால் மகிழ்ச்சியடைவதாகவும் கூறுகிறாராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.