உச்சி மாநாட்டுக்கு தாமதமாக வந்தது ஏன்? பிரதமர் மோடி பேச்சு
உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டுக்கு தாமதமாக வந்தது குறித்து பிரதமர் மோடி பேச்சு
புது தில்லி: பள்ளித் தேர்வுகள் நடைபெறுவதால், மாணவர்களின் நலன் கருதி தாமதமாகப் புறப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்தியாவைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட முக்கிய தொழிற்துறை தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு போபாலில் தொடங்கியிருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு திட்டமிட்ட நேரத்தைக் காட்டிலும் தாமதமாக பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தார்.
நிகழ்ச்சிக்கு வந்ததும், தாமதமாக வந்தது குறித்து அவர் விளக்கம் அளித்தார்.
அதாவது, உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு நிழ்ச்சிக்கு தாமதமாக வந்ததற்கு அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகக் குறிப்பிட்டார்.
பின்னர், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இருப்பது நினைவுக்கு வந்ததால் தாமதமாகப் புறப்பட்டேன். பள்ளித் தேர்வுகள் நடைபெறுவதால், மாணவர்களின் நலன் கருதியே எனது பயண நேரத்தை மாற்றினேன். எனது வருகையால் பாதுகாப்புக் காரணங்களுக்காக சாலைகள் மூடப்பட்டால் குழந்தைகள் தேர்வுக்குச் செல்வது தாமதமாகிவிடுமே என்பதாலும், குழந்தைகள் சரியான நேரத்தில் தேர்வு மையத்துக்கு செல்ல வேண்டும் என்பதற்காகவும் தாமதமாகப் புறப்பட்டேன் என்று கூறியுள்ளார்.