ஏஐ பயன்பாடு : பூடான் பிரதமரை சந்தித்துப் பேசிய மோடி!
ஏஐ உச்சி மாநாட்டில் பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கேவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசியது குறித்து..
ஏஐ உச்சி மாநாட்டிற்கு வருகைப்புரிந்த பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கேவை பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப். 18) சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பிற்குப் பிறகு, இந்தியா - பூடான் இடையிலான நட்புறவு புதிய மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தும் களங்களை நோக்கி நகரவுள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
தில்லி பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு தாக்கம் தொடா்பான ஏஐ உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. பிப். 20 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில், 20 நாடுகளுக்கும் மேற்பட்ட தலைவர்கள், 60 அமைச்சர்கள், 500 உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (AI) நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர்.
Advertisement
பிரதமர் நரேந்திர மோடி அழைப்பின்பேரில் பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கேவும் ஏஐ உச்சி மாநாட்டில் பங்கேற்றார். அவரை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர கூட்டு ஒத்துழைப்பு, ஆற்றல், தொலைத்தொடர்பு, கூட்டு மேம்பாடு மற்றும் மக்கள் தொடர்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த சந்திப்புக்குப் பிறகு பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
''பிரதமர் ஷெரிங் டோப்கே உடனான சந்திப்பு மிகச் சிறப்பானதாக அமைந்தது. செயற்கை நுண்ணறிவின் சக்தியை உலக நன்மைக்காகவும், நிலைத்தன்மை கொள்கைகளுக்கு இணங்கவும் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து நாங்கள் ஆலோசித்தோம்.
இந்தியா - பூடான் இடையிலான நட்புறவானது ஆழ்ந்த பரஸ்பர நம்பிக்கை, நலன், நமது இரு நாட்டு மக்களுக்கு இடையிலான நெருங்கிய உறவுகள் மற்றும் நமது தலைமையை வழிநடத்தும் வகையில் புதிய, மாற்றத்தை நோக்கிய தளத்திலும் தொடர வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.