இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு!
2024 -25 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டைவிட, மூன்றாவது காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு
இந்தியாவின் மொத்த நாட்டு உள்நாட்டு உற்பத்தி அதிகரித்திருப்பதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் அறிக்கையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டின் 2-வது காலாண்டில் 5.6 சதவிகிதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி, மூன்றாவது காலாண்டில் 6.2 சதவிகிதமாக அதிகரித்ததாக தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இருப்பினும், அதற்கு முந்தைய காலாண்டில் (2023 -24) இதே காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.5 சதவிகிதமாக இருந்தது. மேலும், நிதியாண்டில் இது 6.4 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மயிலாடுதுறை ஆட்சியருக்கு அண்ணாமலை கண்டனம்
மத்திய வங்கியின் தரவுகளின் அடிப்படையில், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான நிகர அந்நிய முதலீடு சுமார் 1.2 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. ஆனால், அதற்கு முந்தைய ஆண்டில் இதே காலகட்டத்தில் இது 7.8 பில்லியன் டாலராக இருந்தது.
'சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவான 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும்' என்று பிரதமர் நரேந்திர மோடியின் `வளர்ந்த இந்தியா’ இலக்கை அடைய சுமார் 8 சதவிகித மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அவசியமானது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.