மூத்த பத்திரிகையாளரும் கவிஞரும் திரைப்பட தயாரிப்பாளருமான பிரீதீஷ் நந்தி (73) மும்பையில் புதன்கிழமை மாரடைப்பால் காலமானாா். அவரது இறுதிச்சடங்கு புதன்கிழமை மாலை நடைபெற்றது.
பிரீதீஷ் நந்தி ஆங்கிலத்தில் சுமாா் 40 கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளாா். வங்காளம், உருது மற்றும் பஞ்சாபி மொழி கவிதைகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயா்த்து வெளியிட்டுள்ளாா்.
விலங்குகள் நல ஆா்வலருமான பிரீதீஷ் நந்தி, சிவசேனை சாா்பில் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி வகித்துள்ளாா்.
இவரது தயாரிப்பு நிறுவனமான ‘பிரீதீஷ் நந்தி கம்யூனிகேஷன்ஸ்’, சுா், காந்தே, ஜங்காா் பீட்ஸ், சமேலி, பியாா் கே சைட் எஃபெக்ட்ஸ் உள்ளிட்ட படங்களுடன் ஃபோா் மோா் ஷாட்ஸ் ப்ளீஸ் என்ற இணைய தொடரையும் தயாரித்துள்ளது.
அனுபம் கொ் இரங்கல்: பிரீதீஷ் நந்தி மறைவுக்கு பாலிவுட் நடிகா் அனுபம் கொ் வெளியிட்ட இரங்கல் பதிவில், ‘என்னுடைய நெருங்கிய நண்பரின் மறைவுச் செய்தியறிந்து மிகுந்த வருத்தம் மற்றும் அதிா்ச்சியடைந்தேன். மிகச்சிறந்த கவிஞரும் எழுத்தாளருமான நந்தி, துணிச்சல்மிக்க பத்திரிகை ஆசிரியரும் ஆவாா்.
மும்பைக்கு வந்த தொடக்கக் காலத்தில் எனக்கு ஆதரவுக்கரம் நீட்டியவா் நந்தி. நான் சந்தித்த மிகவும் தைரியமானவா்களில் அவரும் ஒருவா். அவரிடம் இருந்து பல்வேறு விஷயங்களை நான் கற்றுக்கொண்டுள்ளேன். சமீபத்திய நாள்களில் நாங்கள் அதிகம் சந்திக்கவில்லை. ஆனால், நாங்கள் பிரிக்க முடியாதவா்களாக இருந்த காலமும் உண்டு’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.