மூத்த கல்வியாளர் ச.சீ. இராசகோபாலன் மறைவையொட்டி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,
மூத்த கல்வியாளர் ச.சீ. ராசகோபாலன் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
ஆசிரியராகத் தமது கல்விப் பணியைத் தொடங்கிய முனைவர் ச.சீ. ராசகோபாலன் தமிழ்நாடு அரசு முன்னெடுத்த சமச்சீர்க் கல்விக் குழுவின் உறுப்பினராக இருந்து தமிழ்நாட்டின் கல்வி மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்.
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியிலும், மாணவர் நலனிலும் மிகுந்த அக்கறை காட்டியவர். அன்னாரது மறைவு கல்வித்துறைக்குப் பேரிழப்பாகும்.
அவருக்கு என் அஞ்சலியினைத் செலுத்துவதுடன், அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் தோழர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
அன்புமணி ராமதாஸ் இரங்கல்
மூத்த கல்வியாளர் ச.சீ. இராசகோபாலன் மறைவையொட்டி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,
தமிழ்நாட்டின் தலைசிறந்த கல்வியாளர்களில் ஒருவரும், பள்ளிக்கல்வித்துறையில் பல சீர்திருத்தங்கள் செய்யப்படுவதற்கு காரணமாக இருந்தவருமான கல்வியாளர் ச.சீ ராஜகோபாலன் உடல்நலக் குறைவு மற்றும் முதுமை காரணமாக சென்னையில் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
சென்னை மாகாணத்தில் முதல்முறையாக 1922-ஆம் ஆண்டில் சென்னை விக்டோரியா போர்டு பள்ளியில் தமிழ்வழிக் கல்வியைத் தொடங்கியவரும், பள்ளி நிர்வாகத்தின் தயக்கத்தைப் போக்கி சிறுமிகளை பள்ளியில் சேர்த்தவருமான பள்ளியின் தலைமை ஆசிரியர் சருக்கை சீனிவாச அய்யங்காரின் புதல்வரான ச.சீ. இராஜகோபாலன், தந்தையைப் போலவே கல்வித்துறை வளர்ச்சிக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்.
பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் சென்னையில் கடந்த 2005-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இன்றைய தேவைக்கு ஏற்ற கல்வி முறை என்ற தலைப்பிலான 3 நாள் கருத்தரங்கில் பங்கேற்று பேசியவரான ராஜகோபாலன் அவர்கள், கல்வி சார்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாட்டை வெகுவாக பாராட்டியவர்.
பள்ளி ஆசிரியராகவும், அதிகாரியாகவும் பணியாற்றிய அவர், ஆட்சியாளர்களுடன் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி கல்வித்துறையில் பல சீர்திருத்தங்களைச் செய்தவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், கல்வித்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், கல்வித்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.