ஜார்க்கண்டில் பாஜக விரைவில் ஆட்சிக்கு வரும் என்று முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ் தெரிவித்துள்ளார்.
ஒடிசா ஆளுநராக பதவி வகித்து வந்த ரகுபர் தாஸ் கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி அந்த பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து அவர் தீவிர அரசியலுக்குத் திரும்பியுள்ளார். ராஞ்சியில் உள்ள பாஜகவின் மாநிலத் தலைமை அலுவலகத்தில் கட்சியில் இன்று மீண்டும் இணைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது பேசிய அவர், 1980-ம் ஆண்டு முதல் இரண்டாவது முறையாக கட்சியின் உறுப்பினரானதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும், தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்வேன். 2024 சட்டப்பேரவைத் தேர்தலில், நாங்கள் விரும்பிய முடிவுகளைப் பெறவில்லை. முடிவுகளால் நாம் சோர்ந்து போகக்கூடாது. விரைவில் ஆட்சிக்கு வருவோம்.
கூட்டணி அரசுக்கு ஜார்கண்ட் மக்கள் அதிகாரத்தை வழங்கியுள்ளனர். நாங்கள் அதனை மதிக்கிறோம். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றும் என்று நம்புகிறோம். வாக்குறுதிகளை நிறைவேற்ற அவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் அவகாசம் அளிப்போம். அரசு செய்யத் தவறினால் நாங்கள் வீதியில் இறங்கி போராடுவோம்'' என்றார்.
2024 ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவைச் சந்தித்தது. 81 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பாஜகவால் 21 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. அதேசமயம் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சி 56 இடங்களைக் கைப்பற்றி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.