இணையப் பயன்பாடு: நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் அதிகரிப்பு!
இந்தாண்டில் இணையப் பயனர்களின் எண்ணிக்கை 90 கோடியைத் தாண்டும் என்று கணிப்பு
நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் இணையப் பயன்பாடு விகிதம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இன்டர்நெட் அன்ட் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (IAMAI) மற்றும் காந்தார் நிறுவனமும் இன்டர்நெட் இன் இந்தியா ரிப்போர்ட் 2024 என்ற பெயரில் ஆய்வறிக்கை மேற்கொண்டது. இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் குறித்து இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.
ஆய்வில் தெரிவித்ததாவது, இந்தியாவின் இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் 2024 ஆம் ஆண்டில் 88.6 கோடியை எட்டியுள்ளனர்; இந்தாண்டில், 90 கோடியைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது ஆண்டுக்கு 8 சதவிகிதம் என்ற விகிதத்தில் வளர்ந்து வருகிறது. நாள்தோறும் சராசரியாக 90 நிமிடங்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.
குறிப்பாக, கிராமப்புறங்களில் இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் விகிதம் கணிசமாக உயர்ந்து வருகிறது. மொத்தத்தில் கிராமப்புறங்களில் மட்டும் 55 சதவிகிதத்துடன் 488 மில்லியன் மக்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இணையப் பயன்பாட்டின் வளர்ச்சி, நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் இருமடங்காக உள்ளது.
இதையும் படிக்க: சென்னை கார் பந்தயம்- தமிழ்நாடு அரசுக்கு அஜித் குமார் பாராட்டு
ஒட்டுமொத்த இந்தியாவின் இணையப் பயனர்களில் 47 சதவிகிதம் பேர் பெண்கள் என்றும், கிராமப்புறங்களில் உள்ள இணையப் பயனர்களில் 58 சதவிகிதத்தினர் பெண்கள் என்றும் கூறுகின்றனர்.
அரட்டை, மின்னஞ்சல், தொலைபேசி அழைப்புகளுக்காக 75 சதவிகிதத்தினரும், முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் சேவைகளுக்காக 74 சதவிகிதத்தினரும் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். ஆன்லைன் விளையாட்டு, ஓடிடி தளங்களுக்காக அதிகளவில் இணையம் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி, வெறும் 3 சதவிகிதத்தினர் மட்டுமே இணையவழிக் கல்விக்காக இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.
இணையப் பயனர்களில் கிட்டத்தட்ட 98 சதவிகிதத்தினர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற உள்ளூர் மொழிகளையும், பொதுவாக நகர்ப்புற இணையப் பயனர்களில் 57 சதவிகிதத்தினர் பிராந்திய மொழிகளைப் பயன்படுத்தவும் விரும்புகின்றனர்.
நகர்ப்புறங்களில் ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் ஒலிப்பெருக்கி முதலான சாதனங்களில் பயன்பாடும், 2023-ஐவிட 2024-ல் 54 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மேலும், பத்தில் ஒருவர் செயல் நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான பயன்பாட்டில் உள்ளதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.