பாபா ராம்தேவுக்கு பிடிவாரண்ட்!
போலி விளம்பர வழக்கில் பாபா ராம்தேவுக்கு கேரள நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிப்பு...
போலி விளம்பரங்கள் வெளியிட்ட வழக்கில் பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா மற்றும் இணை நிறுவனர் பாபா ராம்தேவுக்கு கேரள நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
பாலக்காடு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் இருவரும் நேரில் ஆஜராக உத்தரவிட்டும் ஆஜராகாததால், பிணையில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்து திங்கள்கிழமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் துணை நிறுவனமான திவ்யா பார்மசி வெளியிட்ட விளம்பரங்கள், மருந்துகள் மற்றும் மந்திர வைத்தியம்(ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள்) சட்டம் 1954 இன் விதிகளை மீறியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Advertisement
அலோபதி உள்ளிட்ட நவீன மருத்துவத்தை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வெளியிட்டதாகவும், நோய்களைக் குணப்படுத்துவதாக ஆதாரமற்ற கூற்றுக்களை வெளியிட்டதாகவும் கேரளம் முழுவதும் பல குற்றவியல் வழக்குகள் திவ்யா பார்மசி மீது தொடரப்பட்டுள்ளன. கோழிக்கோடு நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளன.
உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு
ஏற்கெனவே, போலி விளம்பரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா மன்னிப்பு கோரினர்.
பதஞ்சலியின் போலி விளம்பரத்துக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம், போலி விளம்பரம் தொடர்பாக செய்தித் தாள்களிலும் மன்னிப்பு கோரும் அறிவிப்பை வெளியிட உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைத்தது குறிப்பிடத்தக்கது.