நடுத்தர மக்களுக்காக.. 7 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்த ஆம் ஆத்மி!
நடுத்தர மக்களை மையமாகக் கொண்டு வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகளில்..
நடுத்தர மக்களை மையமாகக் கொண்டு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
கேஜரிவால் வெளியிட்ட விடியோ பதிவில், ஆம் ஆத்மி எம்பிக்கள் நடுத்தர வர்க்கத்தினரின் பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்புவார்கள் என்றும், அதற்காக மத்தின் அரசிடம் 7 கோரிக்கைகளைப் பட்டியலிட்டதாகவும் அவர் கூறினார்.
கல்வி பட்ஜெட்டை உயர்த்த வேண்டும். நாடு முழுவதும் தனியார்ப் பள்ளிகளின் கட்டண உச்சவரம்பு, உயர்கல்விக்கான கல்வி உதவித்தொகையை உயர்த்த வேண்டும். சுகாதார பட்ஜெட்டை உயர்த்த வேண்டும். மருத்துவ காப்பீடு பிரீமியத்தில் இருந்து வரி நீக்கம் மற்றும் வருமான வரி வரம்பை ரூ.7 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும். மேலும் ரயில்வே பயணத்திற்கு முதியோர்களுக்கு முன்பு வழங்கப்பட்ட 50 சதவீத சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார். இதுவே நடுத்தர வர்க்கத்தினருக்கான எங்களின் தேர்தல் அறிக்கையாகும்.
நடுத்தர வர்க்கத்தினர் வரிப் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். நடுத்தர மக்கள் நாட்டின் முதுகெலும்பாக உள்ளனர். நாட்டை வழிநடத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறார்கள். இருப்பினும் நடுத்தர மக்களின் ஆசைகள் அதாவது வீடு, குழந்தைகள், தரமான கல்வி உள்ளிட்ட இலக்குகளை அடைய அவர்கள் வாழ்நாள் முழுவதும் உழைக்கிறார்கள். இதனால் அரசிடம் இருந்து சில நிவாரணங்களையும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவர்களை கூடுதல் வரிகள் மூலம் மீண்டும் மீண்டும் தாக்கப்படுகிறார்கள்.
சுதந்திரத்திற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அரசுகள் நடுத்தர வர்க்கத்தை நசுக்கிவிட்டன. அரசுக்கும் நடுத்தர வர்க்கத்திற்கும் இடையிலான உறவு விசித்திரமானது. நடுத்தர வர்க்கத்தினருக்கு மத்திய அரசு எதையும் செய்வதில்லை. ஆனால் அரசுக்குத் தேவைப்படும்போதெல்லாம் நடுத்தர வர்க்கத்தை வரி மூலம் குறிவைக்கின்றனர்.
வரி செலுத்துவோரின் அவலத்தை எடுத்துரைத்த அவர், ஆண்டுக்கு ரூ.10 முதல் 12 லட்சம் வருமானம் பெற்றால் கிட்டத்தட்ட 50 சதவீதம் பல்வேறு வரிகளுக்குச் செல்கிறது. இன்று பால், தயிர், பாப்கார்ன் போன்றவற்றுக்குக் கூட வரி விதிக்கப்படுகிறது. இத்தகைய வரிப் பயங்கரவாதத்தின் மத்தியில், நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் கனவுகளை நிறைவேற்றுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகி விடுகிறது.
2020-ல் 85,000 இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். 2023-ல் இந்த எண்ணிக்கை 2,26,219 ஆக மூன்று மடங்கு அதிகரித்தது. இந்தியாவின் எதிர்காலமாக இருக்கக்கூடிய நமது திறமையான இளைஞர்கள் மற்ற நாடுகளின் எதிர்காலமாக மாறுவது மனவேதனை அளிக்கிறது. ஆனால் ஆம் ஆத்மியின் அணுகுமுறை எப்போதும் மக்களின் பணத்தை அவர்களின் நலனுக்காக மீண்டும் முதலீடு செய்வதாகும் என்று அவர் கூறினார்.