பஞ்சாபை ஊழல், போதைப்பொருள் குற்றங்களில் மூழ்கடித்த ஆம் ஆத்மி: அமித் ஷா!
ஆம் ஆத்மி அரசைக் கண்டித்து அமித் ஷாவின் எக்ஸ் பதிவு..
பஞ்சாப் மாநிலத்தை ஊழல், போதைப்பொருள் குற்றங்களில் ஆம் ஆத்மி அரசு மூழ்கடித்துவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
இதுதொடர்கபாக அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் தள பதிவில்,
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒவ்வொருவரும் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஏனெனில், வீரர்கள், விவசாயிகள், கடின உழைப்பாளிகள் ஆகியவற்றின் புனித பூமியான பஞ்சாபில், ஆம் ஆத்மி அரசால் ஊழல், போதைப்பொருள் மற்றும் குற்றங்களினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பாக பகவந்த் மான் அரசைக் கடுமையாகச் சாடிய அமித் ஷா, தொலைவிலிருந்து இயக்கப்படும் ஆம் ஆத்மி ஆட்சியின் கீழ், சட்டம் ஒழுக்கம் மற்றும் வளர்ச்சி ஆகியவை பஞ்சாபில் காணாமல் போயுள்ளன.
இன்று மோகாவில் நடைபெறும் பாஜகவின் பொதுக்கூட்டத்தில் பஞ்சாபின் சகோதர சகோதரிகளுடன் உரையாடுவதில் நான் மிகவும் ஆவலாக உள்ளேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
சனிக்கிழமையன்று மோகாவில் நடைபெறும் 'பத்லாவ்' பொதுக்கூட்டத்தில் அமித் ஷா உரையாற்றவுள்ளார். அடுத்தாண்டு தொடக்கத்தில் பேரவைத் தேர்தலைச் சந்திக்கவுள்ள பஞ்சாப் மாநிலத்தில் பாஜகவின் தேர்தல் பிரசாரத்தின் தொடக்கமாகவே இந்த பொதுக்கூட்டம் பார்க்கப்படுகிறது.
மோகாவில் உள்ள கில்லி சஹலான் கிராமத்தில் நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டத்திற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பஞ்சாபின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த 'மால்வா' மண்டலத்தில் மோகா அமைந்துள்ளது. அடுத்த ஆண்டு அம்மாநிலத்தின் மொத்தமுள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 69 தொகுதிகள் இந்த மால்வா மண்டலத்திலேயே அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.