எம்.பி.க்கள் விலகல்! பாஜகவில் சில நாள்கள் மட்டுமே அமைச்சர், பின்னர் சாதாரண பணியாளர்தான்: ஹர்பல் சிங்
பாஜகவில் இணைந்த 7 ஆம் ஆத்ம்பி எம்.பி.க்களும் பஞ்சாப் மக்களுக்கு துரோகமிழைத்திருப்பதாக மாநில அமைச்சர் ஹர்பல் சிங் சீமா குற்றச்சாட்டு
பாஜகவில் இணைந்த 7 மாநிலங்களவை எம்.பி.க்களும் பஞ்சாப் மக்களுக்கு துரோகமிழைத்திருப்பதாக மாநில நிதியமைச்சர் ஹர்பல் சிங் சீமா குற்றம் சாட்டியுள்ளார்.
ஆத் ஆத்மியை சேர்ந்த 7 மாநிலங்களவை எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்தது குறித்து பஞ்சாப் நிதியமைச்சர் ஹர்பல் சிங் சீமா பேசியதாவது, "ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்றால், அதற்கான அறிகுறிகள் முன்பே தோன்றி விடும்.
அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக பாஜக பொய்யான வழக்கை தொடர்ந்தபோது, ராகவ் சத்தா எதுவும் பேசவில்லை. அரவிந்த் கேஜரிவாலை நீதிமன்றம் விடுவித்தபோதும், ராகவ் சத்தா பேசவில்லை.
Advertisement
அப்போதே அவரின் அறிகுறிகளைக் காட்டத் தொடங்கி விட்டார். பஞ்சாப் மக்கள் அவருக்கு அளித்த மரியாதையை அவர் மறந்து விட்டார். அவர் கட்சிக்கு மட்டுமின்றி, பஞ்சாப் மக்களுக்கும் துரோகமிழைத்துள்ளார்.
பாஜக, சில நாள்களுக்கு மட்டுமே ஒருவரை அமைச்சராக வைத்திருக்கும். பின்னர், அவரை சாதாரண பணியாளராக மாற்றி விடும்" என்று தெரிவித்தார்.
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்களான ராகவ் சத்தா, சந்தீப் பாடக், அசோக் மித்தல் ஆகிய மூவரும் பாஜகவில் இணைந்த நிலையில், ஸ்வாதி மாலிவால், ஹா்பஜன் சிங், ராஜேந்திர குப்தா, விக்ரம் சைனி ஆகியோரும் பாஜகவில் இணைகின்றனர்.
மாநிலங்களவையில் ஆம் ஆத்மிக்கு 10 எம்.பி.க்கள் உள்ள நிலையில் அதில் 3-இல் 2 பங்கு எம்பிக்கள் பாஜகவில் இணைந்துள்ளதால் அவர்களை தகுதிநீக்கம் செய்ய முடியாது என்றே கூறப்படுகிறது. இது ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.