தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி 15 வாக்குறுதிகளைத் தேர்தல் அறிக்கையாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் வெளியிட்டுள்ளார்.
தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் பேசிய கேஜரிவால்,
ஆம் ஆத்மியின் வாக்குறுதிகளை நகலெடுப்பதாக பாஜகவை கடுமையாகக் குற்றம் சாட்டினார்.
நாங்கள்தான் நாட்டில் வாக்குறுதி என்ற வார்த்தையை முதலில் உருவாக்கியதாகவும், அதை பாஜக நகலெடுத்துள்ளது. ஆனால் எங்கள் வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றுகிறோம். அவர்கள் அதைச் செய்யவில்லை.
இந்த தேர்தல் அறிக்கையில் 15 வாக்குறுதிகள் உள்ளன. அதில் கேஜரிவால் தனது முதல் வாக்குறுதியாக தில்லி குடியிருப்பாளர்களுக்கு வலுவான வேலைவாய்ப்பு உருவாக்கத்தை உறுதியளித்தார்.
இரண்டாவதாக மகிளா சம்மன் யோஜனாவில் பெண்களுக்கு மாதாந்திர நிதியுதவி ரூ. 2,100 உறுதி செய்கிறது. மூன்றாவதாக சஞ்சீவினி யோஜனா மூலம் மூத்த குடிமக்களுக்கு இலவச மருத்துவ வசதிகள் வழங்கப்படும்.
நான்காவதாக உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணங்கள் தள்ளுபடி, ஐந்தாவதாக ஒவ்வொரு வீட்டிற்கும் 24 மணி நேரமும் சுத்தமான குடிநீர் வழங்குதல்..
அடுத்ததாக மாசுபட்ட யமுனை நதியைச் சுத்தம் செய்யப்படும், தில்லியின் சாலைகளை உலகத் தரமாக மாற்றப்படும்.
பாபாசாகேப் அம்பேத்கர் உதவித்தொகை திட்டத்தின் கீழ், எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு வெளிநாட்டில் படிக்க உதவித்தொகை வழங்கப்படும்.
ஆண் மாணவர்களும் பயனடையும் வகையில், இலவச பேருந்து பயணம் மற்றும் மெட்ரோ ரயில் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும்.
கோயில் அர்ச்சகர்கள் மற்றும் குருத்வாரா கிரந்திகளுக்கு மாதந்தோறும் ரு.18 ஆயிரம் நிதியுதவி, வாடகைதாரர்களுக்கு இலவச மின்சாரம் மற்றும் குடிநீர் சலுகைகள் நீட்டிப்பு.
கூடுதலாக, தில்லியின் கழிவுநீர் அமைப்பை மேம்படுத்துவதற்கும், விடுபட்டவர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்குதல். ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு நிதியுதவி வழங்குவதாகவும் ஆம் ஆத்மி உறுதியளித்துள்ளது.
மகள்களின் திருமணங்களுக்கு ரூ. 1 லட்சமும், ரூ. 10 லட்சம் காப்பீட்டுத் தொகையும் வழங்கப்படும்.
குடியிருப்பாளர் நல வாரியங்கள் அமைக்கப்பட்டு, பாதுகாவலர்களை பணியமர்த்துவதற்கும் நிதி வழங்கப்படும்.
தில்லி குடியிருப்பாளர்களுக்கு மாதம் ரூ. 25,000 மதிப்புள்ள சலுகைகளை வழங்கும். ஆம் ஆத்மி கட்சியின் தற்போதைய இலவச நலத்திட்டங்கள், கட்சி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டால் தொடரும் என கேஜரிவால் வலியுறுத்தினார்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தத் திட்டங்கள் அனைத்தையும் நிறுத்துவோம் என்று ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. பாஜக இந்த சலுகைகளை நிறுத்தினால் ஏற்படும் செலவை நீங்கள் தாங்கிக் கொள்ள முடியுமா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மக்களின் நலன் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக இந்த தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது.
பாஜக தற்போதைய நிலையைச் சீர்குலைக்கும் என்று அச்சுறுத்தி வருவதால், வரவிருக்கும் தேர்தல்கள் இரு கட்சிகளுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய போராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 8-ஆம் தேதி அறிவிக்கப்படும்.
இலவச நலத்திட்டங்களைப் பெரிதும் நம்பியுள்ள ஆம் ஆத்மி அரசின் நிர்வாக மாதிரியின் மீதான ஒரு வாக்கெடுப்பாக இந்தத் தேர்தல்கள் பார்க்கப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.