உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி ராமர் கோயிலில் தரிசனத்திற்காகக் கத்திருந்த இருவர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.
அயோத்தியில் குழந்தை ராமரின் சிலை பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஜனவரி 22-ம் தேதியோடு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. ஆனாலும் நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் கூட்டம் ஸ்ரீராமரை தரிசிக்க வந்தவண்ணமே உள்ளனர்.
இந்த நிலையில், அயோத்தி ஸ்ரீ ராமரை வழிபட ஹரியாணாவிலிருந்து வந்திருந்த ஆண், பெண் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்தபோது திடீரென மயக்கமடைந்து ஸ்ரீராம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இறப்புக்கான சரியான காரணம் தெரியவில்லை, மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
ஆனாலும் சமூக ஊடக தளங்களில் சிலர் கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் இறந்ததாகக் கூறி வருவதாக காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. நெரிசல் காரணமாக இறந்ததாக சமூக ஊடகங்களில் வெளியான தகவலை போலீசார் மறுத்துள்ளனர்.
சமூக ஊடகங்கள் தவறாக வழிநடத்துவதாகவும், அப்படி எதுவும் நடக்கவில்லை. அயோத்தியில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. மாரடைப்பு காரணமாகப் பக்தர்கள் இறந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
அயோத்தியில் திங்கள்கிழமையான இன்று வழக்கத்தைவிடப் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது, பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவிலிருந்து திரும்பிய பலர் ஸ்ரீராமரை தரிசிக்கக் கோயில் நகரத்திற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
அனுமன் கோயில், ராம் கோயிலுக்குச் செல்லும் அனைத்து சாலைகளும் கூட்ட நெரிசலால் அடைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.