ராகுல் மீதான அவதூறு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!
வெவ்வேறு காரணங்களால் வழக்கு விசாரணை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு பிப்ரவரி 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சுல்தான்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகத் தேர்தலின்போது அமித் ஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்ததாக ராகுல் மீது அவதூறு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை ஹனுமன்கஞ்சைச் சேர்ந்த பாஜக தலைவர் மிஸ்ரா 2018-ல் மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வரும் நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் ராகுல்காந்தியின் வழக்குரைஞர் காஷி பிரசாத் சுக்லா உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளவில்லை. இதற்கான மருத்துவச் சான்றிதழைச் சமர்ப்பித்துள்ளார்.
Advertisement
இந்த நிலையில், சுல்தான்பூர் நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி சுபம் வர்மா அடுத்த விசாரணையை பிப்ரவரி 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
முன்னதாக ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால், டிசம்பர் 2023-இல் அவருக்கு எதிராக ஒரு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, பிப்ரவரி 2024-இல் ராகுல் நீதிமன்றத்தில் சரணடைந்தார், ஜூலை 26 அன்று தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். தலா ரூ.25,000 மதிப்புள்ள இரண்டு ஜாமீன்களில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த வழக்கு தனக்கு எதிரான அரசியல் சதியின் ஒரு பகுதி என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் தொடர்ந்து கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.